பழைய சொத்து வரி செலுத்துங்க போதும்.. தமிழக சொத்துவரி தொடர்பாக அமைச்சர் வேலுமணி சூப்பர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மாநகாட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாழும் மக்கள் பழைய சொத்துவரியை செலுத்தினால் போதும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அறிவித்துள்ளார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "உள்ளாட்சி துறைக்கு உட்பட்ட தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், சென்னை மாநகராட்சியில் 1998க்கு பின்னரும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் 2008க்கு பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை.
சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் 1.4. 2018 முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டது. உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து அதன் அடிப்படையிலே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது,.
100 சதவீதம் அதிகரிப்பு
அதன் அடிப்படையில் 19.7.2018ல் அறிக்கை வெளியிடப்பட்டது. வாடகை அல்லாத சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், வாடகைக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், பிற ஏனைய கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி உயர்த்த ஆணைகள் வெளியிடப்பட்டது.
உள்ளாட்சி அமைப்பு
பின்னர் அரசு 26.07.2018ல் வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதத்திற்கு மிகாமல் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே 1.4.2018 முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சொத்து வரி உயர்வு
விரிவாக்கம் செய்யப்பட்ட ஆறு மாநகராட்சிகள், 4 நகராட்சி பகுதிகள் ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகள், முந்தைய நகர்புற அமைப்பில் உள்ளது போன்று திருத்தப்பட்ட மண்டல அமைப்பின் மதிப்பீட்டின் படி, சொத்து வரி உயர்வு செய்து சொத்து வரி விதிக்கப்பட்டது.
சென்னை கோவை தவிர
சென்னை மற்றும் கோவை மாநகரை தவிர, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1.4.2018க்கு முன்பு குறைவான அளவீடு செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சொத்துவரி, குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறு அளவீடு செய்யப்பட்டு சொத்துவரி விதிக்கப்பட்டது.
மறுபரிசீலனை
இதனிடையே பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரியை குறைக்க கோரி பல கோரிக்கை மனுக்கள் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்தன. அதன் அடிப்படையில் நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் கடந்த 8.7.2019 அன்று அறிவித்தவாறு, உயர்த்தப்பட்ட சொத்து வரி, சீராய்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவித்தேன்.
குழு அமைப்பு
இதனிடையே முழுமையாக பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையிலே, தமிழக முதல்வர் எடப்பாடியின் உத்தரவின் பேரில், சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்தபடி, உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய ஏதுவாக தற்போது ஒரு குழு அமைக்கப்படுகிறது.
நிதித்துறை செயலாளர்
அரசு நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், உறுப்பினர், பேரூராட்சி இயக்குனர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வு செய்யும்
இக்குழு மறு கணக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப்பீட்டின் படி உயர்வு செய்யப்பட்ட சொத்து வரி அதிகமாக உள்ளதாக பல்வேறு குடியிருப்பார்கள் சங்கங்கள், வணிக சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிட்டார். இன்றைக்கு உள்ளாட்சி துறை உத்தரவிட்டுள்ளது.
பழைய சொத்துவரி
அதுவரை 15 மாநகாட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன்னர், அதாவது 1.4.2018க்கு முன்பு செலுத்தி வந்த அதே சொத்துவரி தான், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டட உரிமையாளர்கள் செலுத்தினால் போதும்.இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.