ஜெ. சாப்பிட்டது இவ்வளவுதான்.. ஆனால் இவ்ளோ பெரிய பில் வந்தது எப்படி.. தெளிவுபடுத்துமா அப்பல்லோ
Recommended Video
சென்னை: இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிக் அப்பல்லோவில் ஜெயலலிதா தங்கியிருந்த மருத்துவ செலவுகள்தான். அதிலும் அவர் 75 நாட்கள் சாப்பிட்டதாக பில் வந்ததை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவுகளால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை ஏற்படுத்தியது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஆணையம்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், கட்சியினர், அரசு அதிகாரிகள் என அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான மருத்துவ செலவு குறித்த பட்டியலை ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்தது.
அறை வாடகை
அதில் மொத்த செலவு ரூ. 7 கோடி என்றும் அதில் அதிமுகவினர் ரூ. 6 கோடியை செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளது. இதில் ஜெயலலிதா தங்கியிருந்த அறை வாடகையை விட சசிகலா குடும்பத்தினர் தங்கியிருந்த அறை வாடகைதான் அதிகமாக உள்ளது.
கேள்வி
இப்படி எல்லாம் இருக்க ஜெயலலிதாவின் உணவு செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என கணக்கு கொடுத்துள்ளது அப்பல்லோ நிர்வாகம். ஒரு நோயாளி அதுவும் அனுமதிக்கப்பட்ட போது அரை மயக்க நிலையில் இருந்தவர் எப்படி கோடிக்கணக்கிற்கு உணவுகளை உட்கொண்டிருக்க முடியும் என்பதே அனைவரின் கேள்வியும் ஆகும்.
சமர்ப்பிப்பு
அதாவது ஜெயலலிதா கடந்த ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டு அதாவது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர், அவர் அன்றாடம் உட்கொள்ளும் உணவு பட்டியல் ஆறுமுகசாமி ஆணையத்தில் கடந்த மே மாதம் 28-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உலர் பழங்கள்
அதில் அவர் காலை டிபனாக ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டு, காபி, இளநீர், க்ரீன் டீ, கஞ்சி, ஆப்பிள் பழம் 1, மீண்டும் காபி, போர்பான் பிஸ்கெட் 5 எண்ணிக்கை, பாஸ்மதி அரிசி ஒரு கப், மதியத்துக்கு பாஸ்மதி அரசி ஒன்றரை கப், யோகர்ட் 1 கப், மஸ்க் மெலான் பழம் -அரை கப், இரவுக்கு வால்நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் அரை கப், இட்லி உப்புமா ஒரு கப், தோசை, பிரட் 2 ஸ்லைஸ், பால் 200 மி.லி. ஆகியவற்றையே உட்கொண்டிருந்துள்ளார்.
உத்தேச விலை
இந்த பட்டியலை வைத்து பார்த்தோமேயானால் அவர் ஒரு நாளைக்கு 510 ரூபாய்க்கு உட்கொண்டுள்ளார். இதே ஒரு மாதத்துக்கு ரூ. 15, 300 ஆயிரம் ஆகும். 75 நாட்கள் என்றாலும் கூட 38 ஆயிரத்து 250 ரூபாய்தான். இந்த பட்டியல் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாகும். இதெல்லாம் உத்தேச விலைதான்.
மருந்துகள்
இதே அரை மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா எப்படி ரூ. 1.17 கோடிக்கு உணவை உட்கொண்டிருப்பார். சர்க்கரை நோயாளியான அவர் பட்டியல் போட்டே உணவை உட்கொண்டிருந்துள்ளார். நிச்சயம் அவருக்கென மருத்துவமனையில் டயட்டீசியன் இருந்திருப்பர். பாதி நாட்கள் குளூகோஸ் மட்டுமே ஏற்றப்பட்டிருக்கும். அதுவும் மருந்துகள் செலவில்தான் சேர்க்கப்படும்.
சாப்பிட்ட கணக்கு
எப்படி பார்ததாலும் இந்த கணக்கு இடிக்கிறதே. இந்த தொகைக்கான உணவு முழுவதையும் ஜெயலலிதா சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு வேலை இந்த கணக்கு ஜெயலலிதா மட்டுமல்லாமல் அவரை காண வந்தவர்கள், போனவர்கள், தங்கியிருந்தவர்கள் சாப்பிட்ட கணக்கா. இதுகுறித்த கணக்கை தனித்தனியே அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் சமர்ப்பித்துவிட்டதா, இல்லையெனில் இதை அந்நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும்.
மறுக்க முடியுமா
ஜெயலலிதாவின் மரணம்தான் மர்மம் நிறைந்தது என்றால் அவர் குறித்து வெளியாகும் தகவல்களும் மர்மமான முறையிலேயே இருப்பது அவரது தொண்டர்களை வேதனை அடைய செய்கிறது. உணவு பில்லை ஜெயலலிதா வந்து மறுக்க மாட்டார் என்பதற்காக இப்படியா?