செல்போன்கள் சுவிட்ச் ஆப்.. கொரோனா தடுப்பூசியை தவிர்க்கும் சுகாதார ஊழியர்கள்.. இதுதான் தமிழக ஸ்டேடஸ்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லை. ஊசி பற்றிய விழிப்புணர்வு இல்லாதது, பயம் மற்றும் தொடர்ச்சியாக விடுமுறை தினத்தில் மக்கள் இருப்பது ஆகியவை இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16ம் தேதி துவங்கி வைத்தார். அந்தந்த மாநிலங்களில் முதல்வர்கள் இந்த பணிகளை துவங்கினர்.
எடப்பாடி பழனிச்சாமி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை துவங்கி வைத்தார். தமிழக அரசு மருத்துவர் சங்க தலைவர் செந்தில் முதல் ஊசியை பெற்றுக்கொண்டார்.
குறையும் எண்ணிக்கை
இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. சனிக்கிழமை முதல் நாள் 12684 சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் 16 ஆயிரம் பேருக்கு அன்றைய தினம் ஊசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நூறே பேர்தான்
நேற்று நிலைமை இன்னும் மோசமானது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒரு சிலர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்தனர். அதிகபட்சமாக 100 பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவை கோவிஷீல்ட் தடுப்பூசியை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அங்கு போட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது.
சேலம் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனையில் வெறும் 6 பேர் மட்டுமே நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ஊசி போட்டுக் கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய முடியவில்லை என்று மீடியாக்களில் செய்திகள் வந்தபோதிலும், தமிழக அரசு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
பக்க விளைவுகள் இல்லை
இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஒரு நாளைக்கு இத்தனை பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு வைத்துக்கொண்டு நாங்கள் செயல்படவில்லை. தேவை இருப்போர் மட்டும் தடுப்பூசி போட்டால் போதும் என்ற அடிப்படையில்தான் தடுப்பூசி இயக்கம் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் தான், கடந்த சனிக்கிழமை முதல் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தினோம் என்று அவர் தெரிவித்தார்.
பொங்கல் விடுமுறை
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி இதுபற்றி கூறுகையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் பலரும் பொங்கல் கொண்டாடுவதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அவர்கள் பணியாற்றக்கூடிய இடங்களுக்கு திரும்பிய பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். அப்போது எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
நர்சுகள் கருத்து
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 25 செவிலியர்கள் தடுப்பூசி போட பதிவு செய்துள்ள போதிலும், இரண்டு பேர் மட்டுமே ஊசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், சிலரிடம் பேசிய போது, மருத்துவர்கள் முதலில் ஊசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு நாங்கள் ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறோம்.. எங்களது குடும்பத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
செல்போன்கள் சுவிட்ச் ஆப்
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து காத்திருப்பதாக சுகாதாரத் துறை மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய பல ஊழியர்களில் பலரும் காத்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் தங்களது செல்போன சுவிட்ச் ஆப் செய்து விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.