விடிந்தால் தீபாவளி.. வெள்ளிக்கிழமை இரவு வரை தமிழக கடைகளில் கூட்டமோ கூட்டம்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சென்னையை பொறுத்த அளவில், தீவுத்திடல் பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோல வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் கூட்டம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கூட்டம் இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரத்தில் கூட்டம் கடைகளில் காணப்பட்டது. தீபாவளி நாளன்று, அமாவாசை தினம் என்பதால் பலரும் வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் குவிந்திருந்தனர்.
தி.நகரா இது??.. கொஞ்சம் கூட கூட்டமே இல்லை.. தீபாவளி வியாபாரம் படு மோசம்.. பரபரப்பு வீடியோ!
கடந்த சில நாட்களாகவே வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக அவ்வாறு நடக்காத நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென மக்கள் கூட்டம் கூட்டமாக, இனிப்பு கடைகள், கறிக் கடைகள், துணிக்கடைகள், பட்டாசு கடைகளில் குவிந்ததால் களைகட்ட துவங்கியுள்ளது தீபாவளி.