இது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம!
சென்னை: "தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு நிகரானது" என்பது வெறும் வார்த்தை அலங்காரம் அல்ல.. உண்மையிலேயே நாங்கள் அப்படித்தான் சாதித்துக் காட்டியுள்ளனர் போலீசார்.
மீண்டும் ஒரு முறை தமிழக போலீசார் தங்கள் பராக்கிரமத்தைக் இன்று நிரூபித்துள்ளனர். குற்றச் செயல்களை செய்து விட்டு, ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்துவிட முடியாது என்று குற்றவாளிகளுக்கு.. குறிப்பாக கொள்ளையர்களுக்கு.. தமிழக காவல்துறை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்லியுள்ளது.
தமிழக போலீசாரின் திறமைக்கு கடந்த சில நாட்களில் இரண்டு சம்பவங்கள் சாட்சியாக மாறி உள்ளன.
ஒசூர் கொள்ளை
இதில் முதல் சம்பவம் ஓசூர் நகரில் நடந்த தனியார் நிதி நிறுவன கொள்ளை வழக்கு. முத்தூட் நகை நிறுவனத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 12 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்துவிட்டு பறந்து விட்டனர். முகத்தில் முகமூடி.. அதற்கு மேல் ஹெல்மெட் என முற்றிலுமாக தங்கள் அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தனர்.
18 மணி நேரம்தான்
அப்படி, இருக்கும்போது கொள்ளையர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள்? நகைகள் எப்படி மீட்கப்படும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்து இருந்தது. ஆனால், அடுத்த 18 மணி நேரத்தில் தெலுங்கானா மாநிலத்தில் வைத்து கொள்ளையர்களை மொத்தமாக தட்டி தூக்கியது தமிழக காவல்துறை. மொத்த தங்க நகைகளும், 'சேதாரம் செய்கூலி' இல்லாமல் மீட்கப்பட்டது.
சிக்கிய கொள்ளையர்கள்
நகைகளை கொண்டு சென்ற பையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது என்று தெரியாத முட்டாள் கொள்ளையர்கள், காவல்துறையின் கண்காணிப்பில் வசமாக சிக்கிக் கொண்டனர். தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாண்டு தெலுங்கானா காவல்துறை உதவியுடன் சாதித்தது தமிழக போலீஸ்.
சீர்காழி சம்பவம்
இதேபோல இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் நகை வியாபாரி குடும்பத்தில் இரண்டு பேரை கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்றது ஒரு வடமாநில கும்பல். காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், காலை 11 மணிக்குள் கொலையாளிகளை சுற்றி வளைத்தது காவல்துறை.
என்கவுண்டர்
சுற்றுவட்டாரத்தில் ஹிந்தி பேசியபடி சந்தேகத்துக்கு இடமாக இருந்த நபர்கள் அனைவரையும் சல்லடையாக விசாரித்தது. அதில் மூன்று பேர் கொலையாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது. நகைகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதில் ஒருவர் தப்பி ஓடியபோது போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். வேகமாக கொலையாளிகளை பிடித்தது மட்டுமில்லாமல் தப்பி ஓடியவரை திறமையாக சுட்டு வீழ்த்தி, இதுபோன்ற கொள்ளையர்களுக்கு வலுவான ஒரு மெசேஜ் காவல்துறை தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. "இனியும் இதுபோல கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்தால் நாங்கள் பேச மாட்டோம்.. எங்கள் துப்பாக்கி தான் பேசும்" என்ற எச்சரிக்கை மணி சீர்காழியில் ஒலித்துள்ளது. அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த மக்களுக்கு, இந்த என்கவுண்டர் சம்பவம் சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது.