தமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்!
Recommended Video
சென்னை: ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தகவல் பரிமாற்றம் புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழ் மொழியில் இருக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் தெற்கு ரயில்வேக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பால் அதிர்ச்சி
மொழிப்போரை தூண்டுகிறது
தெற்கு ரயில்வேயின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மொழிப்போரை தூண்டும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார். ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனே திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டம் வெடிக்கும்
தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநில செயலாளல் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மொழியை உதாசீனப்படுத்தினால் பல்வேறு தரப்பினரையும் திரட்டி போராட வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார்.
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
தெற்கு ரயில்வே துறை சுற்றறிக்கை மத்திய அரசின் சட்டத்திற்கே எதிராக உள்ளது என பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தமிழில் தான் அலுவல் மொழி என்ற நிலையை ஏற்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திரும்பப்பெற வேண்டும்
இதேபோல், அரசுக்கும் மக்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தும் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருப்பதாக மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார். தெற்கு ரயில்வே தனது சுற்றிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.