கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. 'கதறும்' தேர்தல் களம்
Recommended Video
சென்னை: பிரச்சாரங்களில் பல வகை உண்டு. சிலர் உணர்ச்சி பொங்க பேசி வாக்கு சேகரிப்பார்கள், சிலர் 'ரமணா' விஜயகாந்த் ஸ்டைலில் புள்ளி விவரங்களை அள்ளி வீசி வாக்குகளுக்கு வலை போடுவார்கள்.
சிலர் பேச்சில் பல பகுதி நையாண்டியும், நக்கலுமாகவே இருக்கும். சிலர் என்ன பேச வருகிறார்கள் என்பதே புரியாது.. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதோ நாட்டுக்கு சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரியும்.
இப்படி எத்தனையோ வகையான பிரச்சாரங்கள் இருந்தாலும், எளிதாக மொத்த வாக்காளர்களையும் கவரக்கூடியது வேறு ஒரு வகை பிரச்சாரம்.
என் நண்பன் வெங்கடேசன் கிட்ட இந்த இரண்டுமே அதிகமாகவே இருக்கு.. ஜெயிப்பான்.. சமுத்திரக்கனி பிரச்சாரம்
சென்டிமென்ட் தமிழன்
அந்த பிரச்சாரம் வேறு எதுவுமல்ல கண்ணீர் சிந்தி, உணர்ச்சியில் பொங்குவது. கண்ணீருக்கு கட்டுப்படாத வாக்காளர்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. சென்டிமென்ட் விஷயத்தில் தமிழன் அவ்வளவு வீக். டிவி சேனல்களின், சீரியல்களில் தினமும் வரைட்டி, வரைட்டியாக கண்ணீர் சிந்தும் கதாப்பாத்திரங்கள் மிளிர்வது இந்த உளவியல் பின்னணியில்தான்.
கண்ணீர் ஆறு
பொதுவாக கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள், இந்த வகை பிரச்சாரத்தை கையில் எடுப்பது கிடையாது. தங்களுக்கென்று இருக்கும் இமேஜை இது கெடுத்திவிடும் என்பதும், அதற்கான அவசியம் தேவையில்லை என்று நினைத்ததும் காரணங்களாக இருக்கலாம். இவர்கள் பேச்சுகளில் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்தான் இருக்கும். ஆனால், இவ்விரு சீனியர் தலைவர்களும் இல்லாமல் தமிழகம் சந்திகப்போகும் இந்த லோக்சபா தேர்தலில், கண்ணீர் ஆறு கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.
கருணாநிதி இல்லையே
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக, ஆயிரம்விளக்கு பகுதியில், கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரித்தார். துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்ட அவர் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, "கலைஞர் இல்லாமல் தேர்தலை சந்திப்பது மன வருத்தம் அளிக்கிறது" என்று கூறி, கண்ணீர் சிந்தினார்.
கணேசமூர்த்தி கண்ணீர்
இதேபோல மதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வைகோ.அப்போது, கடந்த காலங்களில் தான் ஈரோட்டிலிருந்து லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் செய்த பணிகளை பட்டியலிட்டார் கணேசமூர்த்தி, பொதுமக்களும் அவரது கருத்தினை ஆமோதித்து கோஷமிட்டனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர் கண்ணீர் சிந்தினார். நிலைமை மோசமானதால், கணேசமூர்த்தியிடமிருந்த மைக்கை வாங்கிக்கொண்டு வைகோ பேச்சை தொடர வேண்டியதாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அன்புமணி உணர்ச்சிவசம்
சமீபத்தில் வைரலான மற்றொரு கண்ணீர் சம்பவம், பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ், உகுத்தது. கடகத்தூர் என்ற பகுதியில் அன்புமணி பிரச்சாரம் செய்தபோது, திடீரென, என் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று நா தழுதழுக்க கூறியதோடு, கண்ணீர்விட்டு அழுதார். இந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
கனிமொழியும் கண்ணீர்
இந்த லிஸ்ட் இத்தோடு முடியவில்லை. தூத்துக்குடியில், சமீபத்தில் நடைபெற்ற, திமுக, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனது சகோதரியும், அத்தொகுதி வேட்பாளருமான கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கருணாநிதியின் மொழித்திறமைக்கேற்ற மகள் என்றும், தனது சகோதரி என்றும் கனிமொழியை குறிப்பிட்டு அவரை வெகுவாக புகழ்ந்துரைத்தார். அப்போது கனிமொழி கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது. இன்னும் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதற்கு முன்பாக எத்தனை பேர் உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தப்போகிறார்கள் என்பதை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.