கஜா பாதித்த பகுதிகளை.. ஏன் திரும்பி கூட பார்க்காமல் இருக்கிறார் மோடி.. வறுத்தெடுக்கும் கட்சிகள்
கஜா பாதித்த மக்களை மோடி சந்திக்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஏன் இன்னும் பிரதமர் டெல்டா விவசாயிகளை சந்திக்க வரவில்லை என்று அரசியல் தலைவர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இழப்பீடும் முறையாக வரவில்லை. தானே புயல், வர்தா புயல் வீசியபோது ஏற்பட்ட இழப்பை சரி செய்ய மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கப்பட்டது. தமிழக அரசு எவ்வளவு கேட்டதோ அதில், வெறும் 5 சதவீதம்தான் ஒதுக்கியது. இப்போதும் 15 ஆயிரம் கோடி கேட்டிருக்கிறார்கள். ஆனால் தந்ததோ வெறும் 4 சதவீதம்தான்.
உலகின் பல பகுதிகளுக்கெல்லாம் பறந்து பறந்து செல்லும் மோடி ஏன் தமிழகம் வராமல் இருக்கிறார். கோவை சத்குரு சிவாலய பூஜையில் பங்கெடுக்க வந்த பிரதமர் ஏன் இயற்கை சீற்றங்களுக்கு வராமல் இருக்கிறார். பாஜக சார்பில் இங்கிருக்கும் தமிழிசையோ, பொன்.ராதாவோ, எச்.ராஜாவோ எவ்வளவுதான் மத்திய அரசு சார்பாக சமாளிப்பார்கள்?
மனித இயல்பு
ஏற்கனவே மத்திய பாஜக மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆர்.கே.நகர் டெபாசிட் இல்லாததே அதற்கு சாட்சி. போதாதற்கு எச்.ராஜா, எஸ்வி. சேகர் நடவடிக்கைகளால் அதிருப்தி வேறு. அதனால்தான் இத்தனை முறை கூவியும் தமிழகத்தில் தாமரை மலராமலேயே உள்ளது. மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு முதல் நபராக வந்துகளத்தில் நிற்பதுதானே அடிப்படை. இதுதானே மனித இயல்பு. இதுதானே அரசியல் தந்திரம்.
ஏன் வரவில்லை
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடாமல், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் இரக்கமில்லாமல் இருப்பதைவிட வேறு என்ன முக்கியப்பணி ஒரு பிரதமருக்கு இருந்திட முடியும்? என்று தெரியவில்லை. இப்போது ஒரு ஆய்வுகுழுவை அனுப்பி வைத்துவிட்டால் எப்படி சரியாகும்? அவர்கள் வந்து இழப்பை கணக்கிட்டு போய் தருவார்கள். அவ்வளவுதான். அந்த இழப்பின் மதிப்பீடு கூட உண்மையா, பொய்யா என தெரியாது.
வேல்முருகன் தாக்கு
இதைதான் கமல் சொல்கிறார், "சேத கணக்கு குறைவாக காட்டப்பட்டுள்ளது, எங்கள் மக்கள் நீதி மய்யத்தினர் இறங்கி பார்த்தபோதுதான் அளவு அதிகமாக உள்ளது" என்றார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும், "ஆய்வுக்கு வந்துள்ள குழுக்கள் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களுக்கும் செல்வதில்லை. ஒருசில இடங்களுக்கு மட்டுமே சென்று வருகின்றனர்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதான் கடைசி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதை சற்று காட்டமாகவே சொன்னார், "புயலினால் தமிழகம் பாதிக்கப்பட்டதை இதுவரை பார்க்க வரவில்லை. அடுத்த முறை மோடி பிரதமராக முடியாது. இதுதான் அவருக்கு கடைசி வாய்ப்பு" என்றார். இத்தனை தலைவர்கள் பிரதமர் மோடிக்கு ஒருசேர எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
ராகுல் வரப்போகிறார்
இதில் உச்சக்கட்டம் என்னவென்றால், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரப்போகிறாராம். திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் மோடி, இன்னும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிடாத நிலையில், ராகுல் வருவது, பாஜக தரப்பினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.