தயாராக இருங்கள்.. ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் புயல்.. ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: கொரோனா பரவி வரும் சமயத்தில் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
Trophical Cyclones: நிஷா முதல் ஆம்பன் வரை.. யாரு இப்படியெல்லாம் பேரு வைக்கிறா தெரியுமா உங்களுக்கு?
ஆம்பன்
வங்க கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக தெற்கு அந்தமான், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி இன்று மதியம் தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால் இந்தபுயல் தமிழகத்தை தாக்காது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை பெய்யும்
இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்களில் கடல் அலை சீற்றத்துடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
என்ன அறிவுரை
இந்த நிலையில் கொரோனா பரவும் சமயத்தில் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இயற்கை பேரிடர்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தயாராக இருங்கள்
தெற்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் எல்லோரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா முகாம்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும் . சீல் வைக்கப்பட்ட இடங்களில் சோதனை செய்ய வேண்டும். அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தால் மக்கள் அனைவரையும் உடனடியாக அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும்.
என்ன வியூகம்
மருத்துவமனைகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும். இதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க வேண்டும். போதுமான அளவிற்கு மருந்து பொருட்கள் , கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். மீட்பு பணிகளை கவனமாக செய்ய வேண்டும். மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீட்பு பணிகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.