கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவதா? பிரேமலதாவிற்கு பத்திரிகையாளர் நலச்சங்கம் கண்டனம்!
கடமையைச் செய்யும் செய்தியாளர்களை மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு எதிராக தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டன அறிக்கை
Recommended Video
சென்னை: கடமையைச் செய்யும் செய்தியாளர்களை மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிற்கு எதிராக தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மிகவும் கோபமாக பேசினார். அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை அவர் ஒருமையில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
கம்முனு இருக்கணும்.. தெரியுதா... போயா... "தூ".. மறக்க முடியாத "கேப்டன்"!
என்ன அறிக்கை
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்க பொதுச்செயலாளர் மிதார் மைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தி.க நிறுவனர் பெரியாரிடம், காமராஜரிடம் ஒரு பண்பை முக்கியமாக குறிப்பிடுவார்கள். தன்னை விட பல பத்தாண்டுகள் வயதில் குறைந்தவராயினும் வாங்க போங்க என்று மரியாதையுடன் அழைக்கும் பண்பு கொண்டவர்கள்
வருத்தம்
மதிப்பதும், மரியாதை தருவதும் தமிழர் பண்பாடு என்பார்கள். ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்களின் போக்கு கவலை அளிப்பதாகவும், கண்ணியக்குறைவாகவும் உள்ளதை காண முடிகிறது. இது வருந்ததக்க செயல்.
முரண்பாடு
கூட்டணி வைப்பதில் உள்ள முரண்பாடுகள், நடப்புகளை மக்களிடம் கொண்டுச்செல்லவேண்டிய கடமையில் செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு கட்சி அரசியல் இல்லை. ஆனால் சமீப காலமாக கொள்கை மாறுப்பாடு காரணமாக வரும் கோபத்தில் செய்தியாளர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பகிரங்கமாக மிரட்டும் போக்கு உள்ளது.
பெயர் சொல்வது
பெயரைச் சொல்லி ஒருமையில் பேசுவது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பேசி வேலையை விட்டு நீக்க முயல்வது போன்ற காரியங்களில் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.
கொடுமை
இன்று தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை நீ, வா, போ என ஒருமையில் அழைத்ததும், எங்கள் அலுவலக வாசலில் காத்துக்கிடப்பவர்கள்தானே நீங்கள் என இருமுறை கூறி உங்களுக்கு சொல்லணும் என்று அவசியமில்லை என்று கூறுகிறார். அதையும் பிரஸ் மீட் நடத்தி கூறுவதுதான் வேடிக்கை. கொள்கை மாறுபாடு, கூட்டணி அமையாத கோபத்தை கேள்விக்கேட்கும் செய்தியாளர்மீது காண்பிக்கும் போக்கை உலகம் கவனித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. மக்களும் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
என்ன கோரிக்கை
இதுபோன்ற கண்ணியக்குறைவான நடத்தை அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல என்பதை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பிலும், ஒட்டுமொத்த செய்தியாளர்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களை இனியும் தொடராமல் கண்ணியத்துடன் நடந்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம், என்று கூறியுள்ளார்.