தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் இன்று பலத்த மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் நீடித்து வருவதால் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மிமீ மழை பெய்துள்ளது.
தற்போது வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இந்தியாவிலேயே மக்கள் ரொம்ப ஹேப்பியா இருக்கும் மாநிலம் எது? வெளியான சுவாரசிய சர்வே.. தமிழக நிலை என்ன?
அதிகனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிப்பில், " வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும்.
தேனி திண்டுகல்லில் கனமழை
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (21) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக வாய்ப்பு உள்ளது.
அவலாஞ்சியில் அதீத மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி ) 21 செ.மீ, பந்தலூர் (நீலகிரி ) 14 செ.மீ, மேல் பவானி (நீலகிரி ) 13 செ.மீ, வால்பாறை (கோவை ) 12 செ.மீ, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தேவலா (நீலகிரி ) தலா 11 செ.மீ, சின்கோனா (கோவை ) 10 செ.மீ மழை பெய்துள்ளது,
கடலுக்கு செல்ல வேண்டாம்
செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 21 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது செப்டம்பர் 20,21 தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். இதேபோல் செப்டம்பர் 22 அன்று தென்மேற்கு ,மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 23 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
குளச்சல் முதல் தனுஷ்கோடி
கடல் உயர்அலை எச்சரிக்கை : தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப். 21 அன்று இரவு 11:30 மணி வரை கடல் உயர்அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்".இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.