தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி: முதல்வர் அதிரடி உத்தரவு
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration card holders) தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில், இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வெளியிட்டார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் என்பது தொடர்ந்து இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளது கருத்தில் கொண்டு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் பாதிப்பு என்பது மிக அதிகமாக உள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது அவர்களுக்கு போதாது என்ற கருத்து உள்ளது. இது பொங்கலுக்கு வழங்கப்படும் நிதியுதவியை போல குறைவானது என்ற விமர்சனமும் உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு பரவலை தடுக்க, பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகளுக்கு சென்று இந்த நிவாரணத் தொகையை வாங்குவது சரியான நடைமுறையாக இருக்காது.. எனவே வங்கி கணக்கில் நேரடியாக இந்த பணத்தை டெபாசிட் செய்வது சரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் வினியோகம் செய்யப்படும். இதனால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்கிறார் முதல்வர்.
நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது நிவாரண நிதி ரூ.1000 போக இன்னும் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். கொரோனா பிரச்சினையை சமாளிக்க அரசு ரூ3,250 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும்.
தமிழகத்தில் சமையல் பொதுக்கூடங்கள் அமைக்கப்படும்.