3வது நாளாக ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு- தமிழகத்தில் ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா.. 13 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3வது நாளாக, தமிழகத்தில் ஒரே நாளில், தலா 1000த்தை விட அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்வுக்கு பிறகு, கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தினமும் ஆயிரம் பேரை தாண்டி பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 586 என்ற அளவில் உள்ளது.
3000த்தை தொட்ட ராயபுரம், சென்னையில் நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா பாதிப்பு.. வெளியான லிஸ்ட்
பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 197 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். அதில், 150 நோயாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பலி எண்ணிக்கை, 200ஐ தொட நெருங்குவது என்பது கவலையளிக்க கூடிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
சென்னை, தூத்துக்குடி
சென்னையில் இன்று ஒரே நாளில், 809 கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 31 உள்மாவட்ட நபர்களுக்கும், வெளியிடங்களிலிருந்து வந்தவர்களில் 20 பேருக்கும், என, மொத்தம் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், தொற்றே இல்லாத மாவட்டமாக இருந்த தூத்துக்குடியில், இப்போது, எண்ணிக்கை அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
குணம்
தமிழகத்தில் இன்று மட்டும், குணம் பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 536 ஆகும். தமிழகத்தில் இதுவரை, குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 13,706. இவர்கள், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 10,680 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சையிலுள்ளனர்.
பரிசோதனை
தமிழகத்தில் பரிசோதனை நிலையங்கள் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. இதில் 29, தனியார் ஆய்வகங்களாகும். இன்று 11094, பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 5 லட்சத்து 14 ஆயிரத்து 433 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.