பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் அதிரடி மாற்றம்? தமிழ் மொழிப் பாடத்திற்கு காத்திருக்கும் ஆபத்து!
சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர தமிழக பள்ளிக் கல்வித்துறை, மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையின் சில அம்சங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் பாடச் சுமை அதிகரிப்பதாக ஒரு பேச்சு உள்ளது.
இந்த நிலையில்தான், மொத்த மதிப்பெண் எண்ணிக்கையை 500ஆக குறைக்க, பள்ளிக் கல்வித்துறை, சார்பில் மாநில அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
எப்படி குறைப்பது
மதிப்பெண்ணை குறைப்பதை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், எப்படி குறைக்கலாம் என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ள ஒரு அம்சம்தான் சர்ச்சைக்கு விதை தூவியுள்ளது. அதாவது தமிழ் அல்லது ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே மாணவர்கள் விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற பரிந்துரைதான் அது.
பாடச்சுமை குறையும்
இதன் மூலம், 6 பாடங்களுக்கு பதிலாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் வெறும் 5 பாடங்கள்தான் இடம் பெறும். இதனால் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்பது பள்ளிக் கல்வித்துறை சிபாரிசு எனக் கூறப்படுகிறது. ஆனால், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் மொழிப்பாடமாக கற்க முடியும் என்பது, சர்ச்சைக்கு காரணம்.
தமிழ் மொழி அறிவு
பொதுவாக இப்படி ஒரு ஆப்ஷன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், பெற்றோர்கள், ஆங்கிலத்தைதான் தேர்ந்தெடுக்கச் சொல்லும் வாய்ப்பு மிக மிக அதிகம். உயர் கல்விகளுக்கு ஆங்கிலம் மட்டுமே உதவும் என்று பெற்றோர் நிர்பந்திக்கும் வாய்ப்பால், வேறு வழியின்றி மாணவர்கள், ஆங்கிலத்தை மொழிப்பாடமாக எடுப்பார்கள். தமிழ் பாடத்தை தேர்ந்தெடுப்போர் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிடும். இதனால், தமிழ் மொழி அறிவு என்பது எதிர்கால சந்ததிக்கு குறைந்துவிடும் என்பதே சர்ச்சைக்கு காரணம்.
உறுதிப்படுத்தவில்லை
இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை அறிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அரசு வெளியிடவில்லை. இந்த பரிந்துரைக்கு பல்வேறு மட்டங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், இதை அரசு ஏற்குமா என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை பரிந்துரை ஏற்கப்பட்டால், தமிழுக்கு பெரும் ஆபத்து காத்துள்ளது என்பது நிச்சயம்.