9,11 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு... கல்லூரிகளும் திறக்கப்பட்டன - உற்சாகத்தில் மாணவர்கள்
ஒன்பது மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு பிறகு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் புற
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதால் தற்போதுதான் கல்விக்கூடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை முடக்கிப் போட்டு விட்டது. பள்ளிகள், கல்லூரிகளில் பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்த மாணவர்களும், மாணவிகளும் கடந்த பல மாதங்களாகவே முடங்கித்தான் போயிருந்தனர்.
ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் வகுப்பறை சூழ்நிலையை அனைவருமே தவறவிட்டனர். எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கும் வகுப்புகளுக்கு சென்று சக நண்பர்களை சந்திப்போம் என்று ஏங்கித்தான் போயினர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த மாதம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இன்று முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்பறைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் செயல்படும். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், டிப்ளமோ கல்லூரி மாணவர்களுக்கும் இன்றுமுதல் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.