10ம் வகுப்பு ரிசல்ட்.. வாவ்.. பாஸாகி அசத்திய மாற்றுத்திறனாளிகள்.. கலக்கிய கைதிகள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரிய அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
இதில் தமிழகம் மற்றும் புதுவை முழுக்க மொத்தம் 152 கைதிகள் தேர்வு எழுதினார்கள். சென்ட்ரல் ஜெயில், பாளையங்கோட்டை ஜெயில், புழல் ஜெயில், சேலம் ஜெயில், சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 152 பேர் இந்த 10ம் வகுப்பு தேர்வை எழுதினார்கள்.
இந்த கைதிகளில் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் 65%க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விவரம்
அதேபோல் தமிழகம் மற்றும் புதுவை முழுக்க மொத்தம் 4816 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினார்கள். இதில் பலர் தனித்தேர்வர்களாக இந்த தேர்வை எதிர்கொண்டார்கள். இதில் மொத்தம் 4395 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் தங்களது விடா முயற்சி மூலமும், நம்பிக்கை மூலமும் இவர்கள் தங்கள் தேர்வில் வெற்றிபெற்று சாதித்து இருக்கிறார்கள். இன்னல்களுக்கு இடையில் அசால்ட்டாக தேர்வெழுதி அதில் அதிக மதிப்பெண்ணும் எடுத்து இவர்கள் சாதித்து உள்ளனர். இவர்களின் சாதனைக்கு ஒரு சல்யூட்!