தமிழகத்தில் தள்ளிப்போனது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. ஜூன் 15ல் துவக்கம்.. கால அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 1ம் தேதி தேர்வு துவங்கும் என வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்தானது.
இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அளித்த பேட்டி: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு, ஜூன் 15ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 25ம் தேதிவரையில் நடைபெறும். ஊரடங்கு மே 31ம் தேதி முடிவடைகிறது. அடுத்த நாளே தேர்வு நடத்துவது கடினமான விஷயம். எனவே, புது தேர்வு தேதி குறித்து ஆலோசித்தோம்.
இதற்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிட்டுள்ளோம். ஜூன் 1ம் தேதிக்கு பதில் 15ம் தேதி ஆரம்பித்து, 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்து, 10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டார். (Tamilnadu sslc new time table)
ஜூன் 15: மொழிப்பாடம்
ஜூன் 17: ஆங்கிலம்
ஜூன் 19: கணிதம்
ஜூன் 20: விருப்ப மொழி
ஜூன் 22: அறிவியல்
ஜூன் 24: சமூக அறிவியல்
ஜூன் 25: தொழில்பாட தேர்வு
முன்னதாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஜூன் மாதம் 1ம் தேதி துவங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குழந்தைகளை தேர்வு எழுதுவதற்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயங்குகிறார்கள். மாணவர்களும் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் அச்சம், மற்றொரு பக்கம் தேர்வு அச்சம் என்ற நிலையில் இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போன்ற நிலையில் சிக்கி கொண்டு தவிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், பல்வேறு கல்வியாளர்களும் குழந்தைகள் நலஆர்வலர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இப்போது நடத்துவது சரியான முடிவு கிடையாது என்று கருத்துக்களை தெரிவித்தனர்.
Cyclone Amphan: வங்கக் கடல் இதுவரை கண்டிராத அதி தீவிர வலுவான புயலாகி வேகமெடுக்கும் "சூறாவளி" ஆம்பன்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்டவற்றில் இருந்தும் அரசுக்கு இது தொடர்பான கோரிக்கைகள் சென்றன. இதையடுத்து கல்வித் துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதற்கு அடுத்த கட்டமாக, இன்று காலை, அவர் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதன்பிறகுதான், நிருபர்களை சந்தித்து, தேர்வு தேதி ஒத்திப்போன தகவலை அவர் தெரிவித்தார்.