10ம் வகுப்பு தேர்வு ரத்து: ஹைகோர்ட்டில் நேற்று பிடிவாதம்.. இன்று முடிவை மாற்றிய அரசு.. பின்னணி என்ன?
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது தேர்வு முழுவதும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
10ம் வகுப்பு பொதுத் தேர்வை இப்போது நடத்தக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை நேற்று விசாரித்த ஹைகோர்ட், தேர்வை தள்ளிப்போடுவது பற்றி பரிசீலிக்குமாறு, கூறியது.
இந்த வழக்கு விசாரணை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
குழப்பமே வேண்டாம்.. 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இப்படித்தான் நிர்ணயிக்கப்படும்.. செம முடிவு!
தேர்வை நடத்துவதில் உறுதி
ஆனால், நேற்று, ஹைகோர்ட்டில் தமிழகம் சமர்ப்பித்த வாதத்தில், இப்போது தேர்வை நடத்தாவிட்டால் எப்போதும் நடத்த முடியாது. வரும் மாதங்களில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். எனவே தேர்வை நடத்திவிடலாம் என கூறியிருந்தது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாகவே தகவல் பரவியது.
தெலுங்கானா ட்விஸ்ட்
ஆனால், நேற்று திடீர் ட்விஸ்டாக, தென் இந்திய அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இத்தனைக்கும் தமிழகத்தோடு ஒப்பிட்டால், தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு என்பது ரொம்பவே குறைதான். இது தமிழக அரசுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் முதல்வரை, அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், பெற்றோர்களின் அச்சம், அண்டை மாநிலங்களின் நிலைப்பாடு இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சந்திப்புக்கு முன்பாகவே, முதல்வர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். பொதுத் தேர்வு ரத்து என தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்துவிட்டார்.
ஒரு மாணவருக்கு பாதிப்பு என்றாலும்
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த நிலையில், சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகளை தேர்வு நடத்தும் அறைக்கு அழைத்து வந்து, பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டால் பெரும் சிக்கலாகிவிடும். நேற்று ஹைகோர்ட் கூறிய ஒரு வார்த்தை முக்கியமானது. மாணவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பு நேரிட்டால் என்ன செய்வீர்கள்.. என்பதுதான் அந்த கேள்வி. ஒரு மாணவர் பலி என்றாலும், அது தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிடும் என்பதை அரசு புரிந்து வைத்துதான், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அச்சத்தை போக்கும் வகையில், பொதுத் தேர்வு ரத்து என்ற முடிவை அறிவித்துள்ளது.