தம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்
சென்னை: தமிழகம் முழுவதும் மாணவர்களை தேடி வந்து ஒட்டுநர் உரிமம் கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப் படுத்த உள்ளது.
இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் பலரிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பதில்லை. குறிப்பாக மாணவர்கள் பெரும்பாலானோரிடம் டிரைவிங் லைசன்ஸ் இருப்பதே இல்லை. முறையாக வாகனம் ஓட்டி லைசன்ஸ் வாங்கு முன்னரே இவர்கள் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
அதோடு இவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பைக் ரேசிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக மாற்றும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பெற்றோருக்கு சிறை தண்டனை
அதன்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்த மசோதா திருத்தங்கள் கூறுகிறது.
மாணவர்களை தேடி
இந்நிலையில் தமிழகத்தில், மாநில அரசு மாணவர்களை தேடி சென்று ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதிகரித்து வரும் வாகனப் பயன்பாடு, அதனால் அதிகரிக்கும் விபத்துகள், என்று நாளுக்கு நாள் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பெருகும் விபத்துகளை குறைக்கவும், வாகன போக்குவரத்தில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வும், ஓட்டுனர் உரிமமும் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.இதற்கான அறிவிப்பைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ளார்.
விபத்தை குறைக்க திட்டம்
கல்லூரிகளுக்கே சென்று டிரைவிங் லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக லேப்டாப், பிரிண்டர், டேட்டா கார்டு உள்ளிட்ட உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் வகையில் தமிழக அரசு ரூ.63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கல்லூரிகளுக்கே சென்று மாணவர்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உரிய பயிற்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதும், வாகன விபத்துகளும் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது லைசென்ஸ்
கல்லூரிகளுக்கு சென்று லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை போன்று டெல்லியில் பொதுமக்களின் வீடுகளுக்கு வந்து லைசன்ஸ் உள்ளிட்ட சாதி சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.