தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ 150 கோடி வசூல்?
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ 150 கோடி வசூலானதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வரவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 5700-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 45 நாட்களாக கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மதுபானக் கடைகள் உள்பட கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இங்கு மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கினர்.
இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பு.. பீர், விஸ்கி, பிராந்தி என்ன விலை.. முழு லிஸ்ட் இதோ!
800 கடைகள்
இந்த நிலையில் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மதுபான கடைகள் திறக்க அனுமதி இல்லை. இதனால் இங்குள்ள 800 கடைகள மூடப்பட்டிருந்தன.
நேரம் ஒதுக்கீடு
அது போல் சென்னையை அடுத்த மற்ற மாவட்டங்களின் எல்லைகளிலும் 900 கடைகள் உள்பட மொத்தம் 1700 கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் காலை 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் குடிகாரர்கள் காத்திருந்தனர். வயது வாரியாக அரசு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தது.
மிகப் பெரிய வசூல்
காலை 10 மணிக்குத் திறக்கப்பட்ட கடைகள் சரியாக மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழக கடைகள் மூலம் ரூ 150 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 1,700 மதுகடைகள் திறக்கப்படாமலேயே ரூ 150 கோடி வசூல் மிகப் பெரிய வசூல் என கூறப்படுகிறது.
அனைத்துக் கடைகள்
தமிழகத்தில் வழக்கமாக அனைத்துக் கடைகளும் திறந்திருந்தாலே ஒரு நாளைக்கு ரூ 90 முதல் ரூ 100 கோடி வரை வசூலாகுமாம். இந்த நிலையில் பெரும்பாலான மதுபான கடைகள் மூடியிருந்த நிலையிலும் 150 கோடி கல்லா கட்டியுள்ளது பெரிய விஷயமாக கருதப்படுகிறது.