6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர் . 2009க்கு முன் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு பின் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே நிறைய ஊதிய வேறுபாடு இருந்தது.
15,000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை ஊதிய வேறுபாடு இருந்தது. இந்த வேறுபாட்டை களைய வேண்டும் என்று பல நாட்களாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இதற்காக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தார்.
கடந்த 24ம் தேதி இவர்கள் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் முதல்வர் இவர்களை சந்திக்கவில்லை. இதனால் அதேநாள் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் போராட்டத்தில் குதித்தனர்.
எல்லோரும் உண்ணாவிரத போராட்டம் செய்ய தொடங்கினர். 300 ஆசிரியர்கள் வரை இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் 6 நாட்களாக இந்த போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. நேற்று ஊதிய முரண்பாடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை இயக்குனர் பிரதீப் யாதவ், இதற்காக ஒரு குழு அமைத்து விரைவில், சம்பளம் உயர்த்தி தரப்படும் என்று கூறியதால் போராட்டம் நிறுத்தப்பட்டது.