ஏசி கிடையாது.. டிரையல் பார்க்க கூடாது.. கஸ்டமர் இன்றி காற்று வாங்கும் தமிழக ஜவுளிக் கடைகள்
சென்னை: மே 18 ஆம் தேதிக்குப் பிறகு நான்காவது கட்ட ஊரடங்கு நாடு முழுக்க அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில், மிக அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன. சிவப்பு மண்டலப் பகுதிகளில் கூட முழு அளவில் வணிகத்தை துவங்குவதற்கு, மாநில அரசுகள் அனுமதி வழங்கி பச்சைக்கொடி காட்டி விட்டன.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கூட, அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து விட்டது. காரணம்.. இதற்கு மேலும் லாக்டவுனை நீட்டித்து தொழில்களை முடக்கிப் போட்டால், மக்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலைமைக்கு வந்து விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கைதான் இதற்கு காரணம்.
பசியோடு போராடுவதா, கொரோனா வைரசோடு போராடுவதா என்ற தர்ம சங்கடத்தில், வைரசோடு போராடுவதே சரி என்ற முடிவுக்கு, அரசு வந்தது.
விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு
ஆன்லைன் சேல்ஸ்
ஆன்லைனில் பொருட்களை விற்க கூடிய அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவைகூட, சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களையும் சப்ளை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால், வணிக நிறுவனங்களில் வணிகம் பெருகி உள்ளதா? நிலைமை எப்படி உள்ளது? என்பது பற்றி ஒரு ஸ்பாட் விசிட் செய்தோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில், ஜவுளிக்கடைகள் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய ஒரு பார்வை இதோ.
ரம்ஜான் காலம்
சென்னையைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவுக்கான ஜவுளிக்கடை நடத்தி வரக்கூடிய நபர் ஒருவர் நம்மிடம் கூறிய தகவல் இது.. கடை திறப்பதற்கு அனுமதி கொடுத்தாலும் கூட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடைகளுக்கு உள்ளே வருவோருக்கு, சானிடைசர் கொண்டு கைகளை துடைக்க செய்கிறோம்.
கடைகளுக்கு உள்ளே வந்தால் முக கவசம் கட்டாயம் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவே இல்லை. மிக சொற்பமான அளவுக்குத்தான் மக்கள் கடைகளுக்கு வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகை கால கட்டத்தில் தினமும் இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடக்கும். ஆனால் இப்போது அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றார் அவர்.
ஆடி மாதம்
மதுரையைச் சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், ஆடி மாதம் தமிழகத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். துணி விற்பனை அப்போதுதான் உச்சபட்சமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் எந்த திருவிழாவும் நடக்கவில்லை என்பதால் ஜவுளிகள் அப்படியே கடைகளில் தேங்கி விட்டன. இப்போது கடையை திறந்து கொண்டு காத்திருக்கிறோம். வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றார். சில ஜவுளிக்கடைகளில் வேறு மாதிரி பிரச்சனை இருக்கிறது. இத்தனை நாட்களாக கடை பூட்டி கிடந்ததால் கரையான் தொல்லை ஏற்பட்டுள்ளது. துணிகளை கரையான் அரித்து விட்டது. மர சாமான்கள் கரையானால் அரிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலையில் ஜவுளிக்கடையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
பணப் புழக்கம்
வாடிக்கையாளர்கள் அதிகமாக கடைக்கு வராததற்கு கொரோனா வைரஸ் அச்சம் ஒரு காரணம் என்றால், கையில் பணப்புழக்கம் இல்லாதது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. வீட்டில் லுங்கி, நைட்டி போன்றவற்றை தொடர்ந்து அணிந்து, அவை தேய்ந்து, கிழிந்து போகும் நிலைக்கு இந்த ஊரடங்கு காலம் மக்களை தள்ளி விட்டது. எனவே அவற்றை வேண்டுமானால் புதிதாக வாங்குகிறார்களே தவிர, விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவதில்லை பெரும்பாலான மக்கள்.
டிரையல் ரூம் கிடையாது
இன்னொரு பக்கம் வேறு ஒரு சிக்கலும் இதில் இருக்கிறது. கடைக்கு சென்றாலும் துணிகளை அணிந்து பார்த்து தேர்ந்தெடுக்க முடியாது. டிரையல் ரூம் வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜவுளி கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டில் இதுவும் ஒன்று. எனவே அளவு சரியாக இருக்குமா என்று தெரியாது. எக்சேஞ்ச் செய்ய முடியாது. கடைகளில் ஏசி வசதி கிடையாது. இந்த வெயில் காலத்தில் புழுக்கத்துக்கு நடுவே ஜவுளி கடைகளுக்கு செல்வது மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது. எனவே மக்கள் ஆன்லைனில் ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவேதான் ஜவுளிக்கடைகள் மின்சார கட்டணத்தையும் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு மட்டுமாவது வருமானம் கிடைக்குமா என்று காத்திருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்தால், தீபாவளியை ஒட்டி இந்திய ஜவுளி வியாபாரம் புத்துணர்ச்சி பெறும் என்பது ஒரு எதிர்பார்ப்புக்குரிய செய்தியாக இருக்கிறது.