ஊதிய உயர்வு கோரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்!.. பேருந்து இயக்கம் பாதிப்பு?
சென்னை: வரும் 25 ஆம் தேதி முதல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை இறுதி செய்ய வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், இந்து மஸ்தூர் சபா உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் போராட்டம் நடத்துகிறார்கள்.
மேலும் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியுதவியை அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வரும் நாட்களில் முகூர்த்த நாள் என்பதால் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.