தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கன மழை கொட்டப்போகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம் ஜில் அறிவிப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
அதேநேரம், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென் மேற்கு பருவமழை மேற்கு கடற்கரை பகுதிகளில் தீவிரமாகியுள்ள நிலையில், தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ய உள்ளதாம்.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி
9 மாவட்டங்களில் கன மழை
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை பாருங்கள்: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், மதுரை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக மழை
நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மழை பெய்யாமல் ஆகஸ்ட் மாதத்தில் கனமழை கொட்டியது. இதனால் நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு நீலகிரியில் குறைவாக பதிவாகியிருந்தது.
தீவிர மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மூன்று மாதங்களில் சராசரியாக 512 மி.மீ பதிவாகும். ஆனால் இந்த வருடம், நடப்பாண்டில் 62 மி.மீ. பதிவாகியிருக்கிறது. ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 160 மி.மீட்டரில், 67 மில்லி மீட்டர் மழைதான் பதிவானது. இம்மாத கடைசி அல்லது ஆகஸ்டு மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். எனவே நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இனிமேல் மழை தீவிரமாக கொட்டக்கூடும்.
தென் மேற்கு பருவமழை
ஜூன் 1 முதல் ஜூலை 13 வரை நாடு முழுவதும் தென் மேற்கு பருவ மழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. ஆனால் மழை அளவு அனைத்து பிராந்தியங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.
ஒரு பக்கம் வெள்ளம்
மேற்கு கடற்கரையின் பல பகுதிகள் இயல்பான மழை பெய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட பகுதிகளில், வழக்கத்தைவிட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலை. ஜூலை 13 வரை மணிப்பூரில் இயல்பை விட 44 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. மிசோரம் இயல்பை விட 38 சதவீதம் குறைவு. இதற்கு நேர்மாறாக, அசாம், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முறையே 22 சதவீதம், 45 சதவீதம் மற்றும் 13 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.