சுற்றி சுற்றி மழை பெய்தாலும், சென்னையில் மட்டும் வெயில் ஏன்? தமிழ்நாடுவெதர்மேன் விளக்கம்
Recommended Video
சென்னை: சுற்றி சுற்றி மழை பெய்தாலும், சென்னையில் மட்டும் ஏன் மழை பெய்யவில்லை என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு வெதர்மேன் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மழை பெய்கிறது. சென்னையை சுற்றியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் வட்டங்களில் கூட நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னை பகுதியில் மட்டும் மழை பெய்யவில்லை. சில நேரங்களில் மேக மூட்டம் இருந்தாலும், கடுமையான புழுக்கத்துடன், வெப்பம் வறுத்து வருகிறது.
நாங்கள் மட்டும் என்னய்யா பாவம் பண்ணுனோம் என்று புலம்பி வருகிறார்கள், சென்னை மக்கள். இதுபற்றி, வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:
வடமேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வரப்படும் காற்றால், சென்னைக்கு அருகே மேக கூட்டங்கள் உருவாகியுள்ளன. இதனால், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் தாக்கத்தால் மழை பெய்யும் வாய்ப்பு அதிகம்.
ஆனால், கடற்பகுதியில் இருந்து வரும் காற்று மிக பலமாக இருக்கிறது. எனவே மேக கூட்டங்களை சென்னையை நோக்கி வரவிடாமல் அந்த காற்று விரட்டி விடும். இதனால் மே மாதத்தில் பெரும்பாலும், சென்னைக்கு மழை வாய்ப்பு குறைவாகும். ஒருவேளை அப்படி மழை பெய்ய வேண்டுமானால், நிறையவே அதிர்ஷ்டம் தேவை. சென்னை வெப்ப நிலை இப்போதைக்கு குறைய வாய்ப்பு இல்லை. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.