கஜா பாதித்த டெல்டா மாவட்டம் டூ சென்னை... 3 நாட்களுக்கு செம மழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்
சென்னை: கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.
9300 மரங்கள்.. 40 வீடுகள்.. 1570 மின் கம்பங்கள்.. கஜாவால் பெரும் சேதத்தை சந்தித்த திருச்சி!
எச்சரிக்கை
இதனால் 19-ஆம் தேதி (நாளை) முதல் 21-ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை மழை பெய்யும். கஜா புயலின்போது மழை பெய்யாத இடங்களில் அதாவது வட தமிழகத்தில் மழையை கொடுக்கும்.
செம மழை
டெல்டா மாவட்டங்களில் கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20-ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். புயலாக மாறாது ஆனால் வடதமிழகத்துக்கு செம மழைக்கு வாய்ப்புள்ளது.
பாண்டி
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 20 முதல் 22-ஆம்தேதி வரை நல்ல மழை பெய்யும். அதிலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரிக்கு கனமழையை கொடுக்கும்.
நல்ல மழை உறுதி
இவற்றில் சில இடங்களில் மிக கனமழையை கொடுக்கும். சென்னையில் குறைந்தபட்சம் இரு நாட்களுக்காவது நல்ல மழை உண்டு. புயல் உருவாக வாய்ப்பில்லை. ஆனால் வடதமிழகத்துக்கு நல்ல மழை உறுதி என்று தெரிவித்துள்ளார்.