காயல்பட்டிணத்தில் வரலாறு காணாத மழை.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மிக அதிக கன மழை கொட்டியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 சென்டிமீட்டருக்கு மேல் மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சேர்ந்தது. தூத்துக்குடி நகரத்துக்கு மழை காரணமாக ரெட்அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலடுக்கு சுழற்சி
இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும், அடுத்த 24 மணி நேரத்தில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதியில், லட்சத்தீவு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
காயல்பட்டிணம்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியில் மிகவும் கன மழை பெய்து உள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 215 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. (அதாவது 21 சென்டிமீட்டர்).
இன்றும் மழை
தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்று தெற்கு மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் நேற்றைவிட இன்று மழை அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.