2 மணி நேரம் பட்டாசு வெடிக்க மழையும் ஒத்துழைக்குமா... தீபாவளியன்று எப்படி இருக்கும் வானிலை?
Recommended Video
சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை இன்று முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். தீபாவளியன்று வானிலை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு துணுக்குத் தகவலையும் அவர் அளித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் பருவமழை குறித்து தமது ஆய்வுகளை பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடகிழக்குப் பருவமழையானது இன்று முதல் தொடங்குகிறது. வானிலை மையம் நாளை பருவமழை தொடங்கும் என்று சொன்னாலும் பருவமழை இன்றே தொடங்கிவிட்டது. வழக்கம் போல இது தொழில்நுட்ப கோளாறால் பருவமழை தொடக்கம் அறிவிப்பில் வரும் முரண்பாடுகள்.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை அதாவது இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும். தமிழக கடலோர பகுதிகள், தெற்கு உள் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் மழையின் அளவு அதிகரிக்கலாம்.
[ஹேப்பி இன்று முதல் ஹேப்பி... நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை]
சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். பெரும்பாலும் இரவு மற்றும் காலை நேரங்களிலேயே மழை பெய்யும். சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும். இரவு அல்லது நாளை காலை முதலே மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் ஒரு குறைந்த சுழற்சி நிலவுவதால் தீபாவளி சமயத்தில் மழை இருக்கும் என்று தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் அந்த சுழற்சியானது மிகவும் குறைந்த அளவே இருப்பதால் அதன் நகர்வுகளை பொருத்தே மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும் என்று பிரதீப் தெரிவித்துள்ளார்.