வர்தா, தானே மாதிரி இல்ல 'கஜா'... கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்குமாம்!
Recommended Video
சென்னை: கஜா புயல் வலுவிழந்துவிட்டதாகவும் வர்தா, தானே புயல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கணிக்க முடியாத அளவிற்கு தனது பாதையை மாற்றிக் கொண்டே வருகிறது. நவம்பர் 15ம் தேதி சென்னை- நாகப்பட்டினத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் நேற்று பிற்பகலில் கஜா புயல் திசை மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கஜா புயல் வர்தா புயலை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனிப்பட்ட முறையில் எடுத்த கணிப்புகளை வைத்து கஜா புயலின் வேகத்தை கணக்கிட்டு அதன் பாதை மற்றும் புயலின் வேகத்தை தெரிவித்துள்ளார்.
[திடீரென வேகம் குறைந்த கஜா.. நின்று நிதானமாக சுழன்று வருகிறது ]
கஜா வலுவிழந்து கரையை கடக்கும்
பிரதீப் ஜான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை நிலவரத்தில் கூறியுள்ளதாவது : கஜா புயல் உருவாகும் போது இருந்த நிலையில் இருந்து மாறியுள்ளது. எனவே புயல் கரையை கடக்கும் முன்னர் வலுவிழந்து நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கும். இந்தப் புயலானது வர்தா தானே போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது. கரையை கடக்கும் முன்னரே தனது வலு மொத்தத்தையும் இழந்து விடும் இதனால் பெரிய அளவிலான பாதிப்பு இருக்காது.
கடலூர் -வேதாரண்யம் இடையே கரையை கடக்கும்
கஜா புயலுக்கு நடுவே எதிர்பாராத ஒரு சுழற்சி ஏற்பட்டதை வரைபடத்தில் காண முடிகிறது. இதை வைத்து பார்க்கும் போது கஜா புயல் கடலூர் - வேதாரண்யம் இடைபட்ட பகுதியில் கரையை கடக்கும். சில மாதிரிகள் புயல் பாம்பன் அல்லது இலங்கை இடையே கரையை கடக்கும் என்று சொல்கிறது ஆனால் அப்படி நடக்காமலும் போகலாம். புயலின் திசை மாறி கடலூர் வேதாரண்யம் இடையே கரையை கடப்பதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சென்னையில் நல்ல மழை பெய்யும்
சென்னையை பொருத்தவரையில் இனி வரும் காலங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 14 - 17 வரை சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும், அதிக மழை கொட்டுமே என்று அச்சப்படத் தேவையில்லை. மழை தொடர்பாக வாட்ஸ் அப் அல்லது முகநூலில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
கஜா புயல் கரையை கடக்கும் பகுதிகள் அதிக மழையை பெறும் குறிப்பாக தெற்கு உள் தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 60 - 80 கி.மீட்டர் வேகத்தில் வீசும் சில நேரங்களில் 90 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசும். எனவே கஜா புயல் வர்தா அல்லது தானே போல வலுவான புயலாக இருக்காது.
|
பருவமழை தீவிரமாகும்
அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வர இருப்பதால் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும் என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இந்த கணிப்புகள் அனைத்தும் தான் தனிப்பட்ட முறையில் எடுத்த வானியல் ஆய்வுகள் என்றும் அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையம் பின்பற்றும் கணிப்புகளுக்கும் இவற்றிற்கும் வித்தியாசம் இருக்கும் என்றும் ஜான் கூறியுள்ளார். நிர்வாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையம் தகவல்களையே பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.