வங்கக் கடல் இதுவரை கண்டிராத புயல் ஒடிஸா புயல்தான்.. ஆம்பன் இல்லை.. தமிழ்நாடு வெதர்மேனின் விளக்கம்
சென்னை: வங்கக் கடலில் உருவான புயல்களில் 1999ஆம் ஆண்டு உருவான ஒடிஸா புயலே தீவிர புயலாகும் என்றும் ஆம்பன் புயல் தீவிர புயல் இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில் அதிர்ஷ்டவசமாக சென்னையில் மழை பெய்தது. கோடையின் முதல் நாளான இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
சென்னையில் இத்தனை நாட்களாக வெயில் ஓரளவுக்கு குறைந்திருந்தது. அதாவது முதல் முறையாக இந்த கோடையில் வெப்பநிலையானது 38 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டாமல் இருந்தது. ஆனால் இன்று முதல் மற்ற ஊர்களைவிட சென்னையில் அதிகமான அளவு வெப்பம் இருக்கும்.
1970-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை.. ஒடிஸாவை புரட்டி போட்ட புயல்கள்!.. ஓர் அலசல்
வெப்பக் காற்று
இது மாதிரியான வெப்பநிலை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும். இரவு 9 மணி முதல் 10 மணி வரை கூட வெப்பக் காற்றை சென்னைவாசிகள் உணரக் கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி சென்டிகிரேட்டாக இருக்கும்.
கேரளா
கடலோர மாவட்டங்களை விட உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். கேரளாவில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையோ அல்லது குறைந்த மழையோ பெய்யலாம். உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அதிர்ஷ்டமே இல்லாத சென்னையில் கூட மழை பெய்தது. இன்று முதல் காற்றின் திசையால் கேரளாவில் பெய்யும் மழைக்கு முடிவு ஏற்படும். மழையும் இன்று இரவு முதல் படிப்படியாக குறையும்.
காற்று
சூப்பர் புயல் ஆம்பன் வலுவிழக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 170 கி.மீ வேகத்தில் காற்று வீசும். 4 அல்லது 5 மீட்டருக்கு புயல் எழுச்சி பெறும். கொல்கத்தாவில் மணிக்கு 75 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புதன்கிழமை கனமழை பெய்யும்.
தீவிர புயல்
வங்கக் கடலில் மிகவும் தீவிரமான புயல்களாக 1999ஆம் ஆண்டு உருவான ஒடிஸா புயல், 1991ஆம் ஆண்டு உருவான வங்கதேச புயல், 1977-இல் ஆந்திரா புயல், 1990 இல் ஆந்திர புயல், 1963 இல் வங்கதேச புயல், 1989-இல் கே (Gay) புயல், 2019-இல் ஃபனி புயல் ஆகியவை கருதப்படுகிறது.
புயல் கண்
ஆம்பன் புயல் தீவிர புயல் அல்ல. ஏனெனில் இந்த ஆம்பன் புயல் கண்சுவர் இடமாற்ற சுழற்சியாக (Eyewall Replacement Cycle) உள்ளது. அதாவது இது வெப்பமண்டல புயல்கள், சூப்பர் புயல்களின்போது ஏற்படும். Eyewall Replacement Cycle என்றால் பொதுவாக ஒரு புயல் உருவாகும் போது புயல் கண் உருவாகும்.
புதிய கண்
ஆனால் இந்த ERC-இல் பழைய புயல் கண் நொறுங்கி புதிய கண் உருவாகும். இது கரையை கடப்பதற்குள் உருவாகிவிட்டால் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆம்பன் புயல் விவகாரத்தில் கரையை கடக்கும் போதுதான் புதிய கண் உருவாகிறது. எனவே சேதம் அதிகமாக இருக்காது. இதனால்தான் இது வங்கக் கடலில் உருவான அதி தீவிர புயல் இல்லை என்றார் தமிழ்நாடு வெதர்மேன்.