கேளம்பாக்கம் டூ கூடுவாஞ்சேரிக்கு மிக அதிக கனமழை.. 2015 சாதனையை சென்னை முறியடிக்குமா?.. வெதர்மேன்
சென்னை: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த இருதினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை அருகே இரு முறை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் அது தீவிரமடைவது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கணித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு வெதர்மேன்
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், கடலூரில் கனமழைக்கு காரணமான மேகக் கூட்டங்கள் தற்போது சென்னை புறநகர் பகுதியின் தெற்கு திசை நோக்கி நகர்ந்து வந்துள்ளன. இது மேலும் மேலும் நகர்ந்து சென்னையின் மற்ற பகுதிகளிலும் மழையை தரும்.
கடும் பாதிப்பு
ஏற்கெனவே மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேளம்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் கனமழை பெய்யும். நுங்கம்பாக்கத்தில் இன்று மதியம் வரை 2 மி.மீட்டர் மழைதான் பெய்துள்ளது. மதியம் வரை மிஸ் செய்த அளவு மழையை நுங்கம்பாக்கம் இன்று பெற்றுவிடும். இன்று மதியம் நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 1021 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம்
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த 1049 மி.மீ. மழை அளவை முறியடிக்க நுங்கம்பாக்கத்திற்கு வெறும் 29 மி.மீ. மழை தேவைப்படுகிறது. அது போல் 1918 ஆம் ஆண்டு பெய்த 1089 மி.மீ. மழை பொழிவை முறியடிக்க 69 மி.மீ. மழை பெய்தால் போதும். கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
Recommended Video
மிகப் பெரிய மழை
இதற்கு முன்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழகத்தில் மிகப் பெரிய மழை பெய்ய போகிறது. கடந்த 2 தினங்கள் பெய்த மழையை காட்டிலும் சென்னையில் மழையின் அளவு குறையும். எனினும் இன்று இரவு மேகக் கூட்டங்களை வைத்து முடிவு செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான். சென்னையில் நவம்பர் மாதம் 1000 மி.மீ மழையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.