இன்று முதல் கேரளாவில் அதிக மழைக்கு வாய்ப்பு.. மேட்டூர் அணைக்கு நல்ல வேட்டை.. வெதர்மேன்
சென்னை: கேரளா, குடகு, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கர்நாடக கடலோரம் மற்றும் கேரளாவில் கடந்த இரு ஆண்டுகள் பெய்த மழை விவரத்தை காண்போம். அதில் கடலோர கர்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு 925 மி.மீ மழையும் 2019-ஆம் ஆண்டு 1,376 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இயல்பான மழை அளவு 756 மி.மீ. ஆகும்.
அது போல் கேரளத்தில் 2018-ஆம் ஆண்டு 822 மி.மீ. மழையும், 2019-ஆம் ஆண்டு 951 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இயல்பான மழையின் அளவு 420 மி.மீ. மழையாகும். கடந்த இரு ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதங்களில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதை பார்த்தோம்.
20.5 செமீ மழை பெய்யும்.. 50 கிமீ வேகத்திற்கு காற்று வீசும்.. கேரளா இடுக்கிக்கு ரெட் அலர்ட்.. கனமழை!
2020
அதிலும் குறிப்பாக 2019-ஆம் ஆண்டு குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது. இதனால் வறட்சியிலிருந்து அதிக மழை பொழிவாக மாறியது. அணைகள் நிரம்பி வழிந்தன. மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, குடகு, சிக்மக்லூர், மல்லாபுரம், திருச்சூர், வால்பாறை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சரி 2020-ஆம் ஆண்டுக்கு வருவோம்.
குறைந்த காற்றழுத்தம்
மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மழைப் பொழிவு தற்போது வரை குறைவுதான். ஆனால் இவையெல்லாம் வரும் ஆகஸ்ட் மாதம் மாற்றமடையும். தற்போது வரை குறைந்தது ஒரு குறைந்த காற்றழுத்தம் கூட உருவாகவில்லை. இத்தனைக்கு பருவமழை காலம் வேறு. இனி குறைந்த காற்றழுத்தம் வங்கக் கடலின் வட பகுதியில் உருவாகும்.
காற்று நகர்வு
இதற்கு அடுத்து ஆகஸ்ட் 2ஆவது வாரத்தில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும். எப்போதெல்லாம் குறைந்த காற்றழுத்தம் உருவாகினாலும் அப்போதெல்லாம் வங்கக் கடலில் இருந்து ஒடிஸா, மத்திய பிரதேச,ம் மகாராஷ்டிரா, குஜராத் வழியாக அரபிக் கடலுக்கு காற்று நகர்கிறது. இது அதீத மழையை உண்டு செய்யும்.
வறண்ட பகுதிகள்
முதல் குறைந்த காற்றழுத்தம் வரும் 8 அல்லது 9-ஆம் தேதி உருவாகும். இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யக் கூடும். வறண்ட பகுதிகளான கோவை, ஈரோடு, பாளையம்கோட்டை உள்ளிட்ட மலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு நல்ல மழையை கொடுக்கும். பால்காட் கனவாய் வழியாக காற்று நுழைந்து செங்கோட்டை வழியாக செல்வதால் திருப்பூர், கரூர். ஈரோடு, நாமக்கல், தஞ்சை, திருச்சி, நாகை, தென்மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் மழை பெய்யும்.
மேகக் கூட்டங்கள்
தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்யும். இதனால் தேனி, தேக்கடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பொருத்தமட்டில் மேகக் கூட்டங்கள் வேகமாக நகரும் அளவுக்கு மழை பெய்யும். அடுத்த வாரம் குறைந்த காற்றழுத்தம் வந்தால் மட்டுமே டமால் டுமீல் மழைக்கு வாய்ப்பு. எனவே அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
காவிரி
கர்நாடகத்தில் தலைகாவேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கபிணி, ஹாரங்கி ஆகிய அணைகள் நிரம்பிவிடும். ஆகஸ்ட் மத்தியில் மற்ற அணைகளும் நிரம்பிவிடும். எனவே அதிக நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படும். காவிரி பகுதிக்கு நல்ல நாட்களாக அமையும்.
எச்சரிக்கை
அது போல் கேரளாவில் இடுக்கி, வயநாடு,மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கண்ணனூர், காசர்கோடு, கோழிகோடு ஆகிய மாவட்டங்களில் உச்சபட்ச எச்சரிக்கை தேவை. 5 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மிக அதிக மழை பெய்யும். இந்த 4 நாட்களும் உஷாராக இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.