தானே, கஜா, வர்தா போல் இல்லை.. சேதாரத்தை குறைத்து மழையை அள்ளி கொடுத்த நிவர்.. வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் அண்மைகாலமாக உருவான புயல்களில் மழையை கொடையாக அளித்த புயல் என்றால் அது நிவர் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் பொதுவாக மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரும் புயல்கள் எப்போதும் மழையை தரும்.
ஆனால் முழுக்க முழுக்க மேற்கு பக்கம் நோக்கி நகர்ந்த தானே, கஜா, வர்தா புயலை விட நிவர் புயல் மிகவும் வித்தியாசமானது.
கரையை கடந்த நிவர் புயல்.. வழக்கத்துக்கு மாறாக வீராணம் ஏரி.. 2 அடிகள் வரை அலை சீற்றம்.
இடையூறு
இன்று காலை முதல் சென்னையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மீனம்பாக்கத்தில் மட்டும் இன்று காலை அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. ஆனால் இவையெல்லாம் காற்று அல்ல, மக்களுக்கு அதிகபட்சம் இடையூறு கொடுக்கவே உருவான மழை.
காற்றழுத்த தாழ்வு நிலை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தாம்பரத்தில் 314 மி.மீ. (31 செ.மீ) மழை பெய்துள்ளது. அது போல் புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இன்னும் 4 நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது.
மழையே இல்லாத டெல்டா
இந்த காற்றழுத்தம் மழையே இல்லாத டெல்டா மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் இல்லாமல் மழையாக மட்டுமே கிடைக்க வேண்டும் என நம்புவோம். அந்த காற்றழுத்தம் டெல்டா அருகே நகர்ந்தால் அதன் உள் மாவட்டங்களான நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் நல்ல மழையை கொடுக்கும். இந்த வடகிழக்கு பருவமழையில் நல்ல மழை அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையில் 840 மி.மீ. (84 செ.மீ) சராசரி மழையை பெற்றுவிட்டோம். இதற்கு மேல் பெய்தாலும் அது கூடுதலாகதான் இருக்கும். சென்னைக்கு நீர் அனுப்பும் அனைத்து ஏரிகளும் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டன என்றார் தமிழ்நாடு வெதர்மேன்.