ஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்
சென்னை: புரேவி புயலால் இன்று இரவு முதல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் கடலில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக புரேவி புயல் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் நகர்கிறது.
பின்னர் மன்னார் வளைகுடா பகுதியில் நுழைகிறது. அங்கும் அரேபிய கடலில் ஏற்பட்ட ஒரு வித அழுத்தத்தால் மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. பின்னர் அரபிக் கடலில் நுழையும் இந்த புயல் அங்கும் வலுவிழக்கிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
அதிகபட்சம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாமோ குறைந்த காற்றழுத்த பகுதியாகவோ வலுவிழக்க வாய்ப்புண்டு. வெகு சில புயல்களே இலங்கை அருகே கரையை கடக்கும் அதற்கு காரணம் என்னவென தெரியவில்லை என்றும் அழுத்தம் காரணமாக இருக்கும் என்றும் நிவர் புயலின் போது தெரிவித்திருந்தேன்.
கரையை கடந்த புயல்கள்
இலங்கை அருகே 3 புயல்கள் மட்டுமே கரையை கடந்தன என்றால் நம்புகிறீர்களா, ஆம் 1978, 1992, 2000 ஆகும். எனவே 20 ஆண்டுகள் கழித்து இலங்கையில் ஒரு புயல் புயலாகவே நுழைகிறது. புரேவி வலுவிழக்க தொடங்கிவிட்டது. அது மெல்ல இலங்கைக்கு நுழையும் அங்கு மேலும் வலுவிழந்து, இன்று திருகோணமலை அருகே கரையை கடக்கிறது. அப்போது திருகோணமலை முதல் வடக்கு இலங்கையின் ஜாஃப்னா அருகே காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ வீசும்.
ராமேஸ்வரம்
பின்னர் அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக ராமேஸ்வரத்திற்கு நாளை காலை நகர்கிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ராமேஸ்வரம் வரை காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசும். அப்போது புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக மன்னார் வளைகுடாவில் ஒரு நாள் முழுவதும் இருக்கும். பின்னர் மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாக மாறி கன்னியாகுமரி- பாம்பன் இடையே டிசம்பர் 4-ஆம் தேதி கரையை கடக்கிறது.
நெல்லை
இதனால் 4ஆம் தேதி காலை முதல் மதியம் வரை ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். நெல்லையில் மாஞ்சோலை, திண்டுக்கல்லில் கொடைக்கானல் ஆகியவற்றில் பலத்த காற்று வீசும். நாளை ராமநாதபுரம், புதுகை, சிவகங்கை, மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.
கொடைக்கானல்
அது போல் குன்னூர், கொடைக்கானல், பாபநாசம், மாஞ்சோலை பகுதிகளில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புண்டு. 3 முதல் 5-ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். மன்னார் வளைகுடாவில் புரேவி தங்குவதால் மேகங்கள் உருவாகி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும்.
கடலூர்
பாண்டிச்சேரி, கடலூரிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு. உள்மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய பகுதிகளிலும் சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும் குறைந்தபட்சம் 1 முதல் 2 நாட்களுக்காவது நல்ல மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.