இன்னும் ரெண்டே நாள்தான்.. இப்படியே போச்சு தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.. வெதர்மேன்
சென்னை: இன்னும் 2 நாட்கள் மழை பெய்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில் புரேவி வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் உள்ளது. இதனால் ஏற்படும் மேகக் கூட்டங்களால் டெல்டா மற்றும் வட தமிழகத்தில் இன்று முழுவதும் மழை பெய்யும்.
புரேவி
தமிழகத்தில் மற்றொரு மழை மிக அதிக கனமழை பெய்யும். பொதுவாக மன்னார் வளைகுடாவில் புயல் அல்லது புயல் சின்னம் வந்தால் நல்ல மழைப் பொழிவு இருக்கும். கடந்த 2 நாள் மழை அதைத்தான் நிரூபித்துள்ளது. இன்னும் 2 நாள் இது தொடரும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும். புரேவி மூலம் நமக்கு நிறைய மழைதான் கிடைத்துள்ளது.
மிக கனமழை
காற்று அதிகம் வீசவில்லை. இதை நான் முதல் நாளிலிருந்தே சொல்லி வருகிறேன். மிக அதிக கனமழை பெய்ய புரேவி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது சிறப்பானது. இன்னும் இரு நாட்களுக்கு மழை இருக்கும். நிவரை விட நல்ல மழையை இந்த புரேவி கொடுக்கிறது.
நாகை
கடலூர், நாகை, சிதம்பரம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய மன்னார் வளைகுடா சிறப்பான இடம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டது. கடலூரில் பல இடங்களில் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நல்ல மழை
அது போல் தஞ்சை, நாகை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று வரை டெல்டா மாவட்டங்களுக்கு மழை இல்லாத நிலை இருந்த நிலையில் தற்போது நாளை முதல் டெல்டா மாவட்டங்களும் வடகிழக்கு பருவமழையில் மழை மிகுந்த மாவட்டங்களாக மாறும்.