பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறது சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் கவலை
சென்னை: பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்னை செல்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு பயனளிக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. மழை பெய்தது.
கஜா புயல் உருவானது. அந்த புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு மழை பெய்தது. எனினும் சென்னைக்கு அந்த அளவுக்கு மழை கை கொடுக்கவில்லை.
சமாளிப்பது எப்படி
சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் ஏதும் நிரம்பவில்லை. இதனால் வரும் கோடை காலத்தை சென்னை மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொறுமை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் டிசம்பர் மாதம் மத்தியில் நிச்சயம் தமிழகத்துக்கு மழை வரும். அதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ளன. அதுவரை பொறுமையாக இருங்கள்.
பயன் தமிழகத்துக்கே
பர்மா, ஒடிஸா, ஆந்திரா அருகே மழை சென்றாலும் இறுதியில் தமிழகத்துக்கே பலனை தரும். ஒரே ஒரு கேள்விதான். தமிழகத்துக்கு வரும் மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகுமா, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வருமா இல்லை புயலால் மழை வருமா என்பதுதான் சந்தேகம்.
தண்ணீர் பஞ்சம்
இன்னொன்று அந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பலனை அளிக்குமா இல்லை டெல்டா மாவட்டங்களுக்கு பலனை தருமா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் அடிக்கடி சொல்வது போல் சென்னையில் தவறவிட்ட மழைக்கு எதையும் செய்ய முடியாது. சென்னை மக்கள் பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறார்கள்.
மழை இருக்காது
அது வரை பொறுமையாக இருந்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். டிசம்பர் 14, 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்காது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.