32 மாவட்டங்களும் ஊட்டி ஆனது... கடுங்குளிரில் நடுங்கும் தமிழகம்.. பொங்கல் வரை தொடருமாம்!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவு வரும் பொங்கல் வரை நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விவசாயிகள், மக்களை ஏமாற்றி விட்டு இந்த முறையும் வழக்கம் போல் பொய்த்துவிட்டது. இதனால் மக்கள் மனவேதனையில் உள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையில் காணப்படுவதால் வரும் கோடையை எப்படி சமாளிப்பது என்ற கவலை இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது. டிசம்பர் முடிய மழை இருக்கும் என வானிலை அறிவிப்புகள் வந்த போதிலும் அதுவும் பொய்த்துவிட்டது.
கடும் அவதி
இந்த நிலையில் தமிழகத்தில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. மாலை 4 மணி முதல் குளிர் காற்று வீசத் தொடங்குகிறது. இந்த நிலை மறுநாள் நண்பகல் 12 வரையும் தொடர்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பனித்துளிகள்
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றைய தினம் கடுங்குளிர் நிலவியது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள பதிவில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடர்ந்த பனி, கடுங்குளிரான காலை பொழுது, அதிக பனித்துளிகள் காணப்பட்டன.
செல்சியஸ் பதிவு
அதுபோல் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே வெப்பநிலை காணப்பட்டது. இந்த கடுங்குளிர் பொங்கல் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பூந்தமல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இயல்பை விட குறைவு
தமிழகத்தில் ஓசுர், கிருஷ்ணகிரி, திருத்தணி, திருவள்ளூர், விரிஞ்சிபுரம், வேலூர், பையூர், தருமபுரி, அந்தியூர், ஈரோடு, கோவை, பேச்சிப்பாறை, திருமங்கலம், மதுரை, பவானி, பாண்டிச்சேரி, சூலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே உள்ளது.
குறைந்த வெப்பநிலை
சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளான பூந்தமல்லி, மாதவரம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், மீனம்பாக்கம், எண்ணூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 19 டிகிரி செல்சியஸை விட குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.