கஜா புயல்.. ஆறுதல் தரும் நல்ல விஷயத்தை சொல்லிய வெதர்மேன்
Recommended Video
சென்னை: வர்தா அளவுக்கு கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் மூலம் தமிழகம், தெற்கு கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளுக்கு நல்ல மழையை கொடுக்கும்.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது.
[கஜா புயல்: நவம்பர் 15-ஆம் தேதி கனமழை பெய்யும்- சென்னை வானிலை மையம்]
ரெட் அலர்ட்
வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யக் கூடும். கஜா புயலால் 14,15-ஆம் தேதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்துக்கு வரும் 15-ஆம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
நல்ல மழை பெய்யும்
எனினும் இந்த புயல் வர்தா போன்ற பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நல்ல மழை பெய்யும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரை நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி என எந்த பகுதியில் உருவாகியுள்ளது என்பது இன்னும் உறுதியாகவில்லை. இது ஓரிரு நாளில் தெரியும்.
உள்மாவட்டங்களுக்கு
நவம்பர் 15-ஆம் தேதி மாலை அல்லது இரவு கரையை கடக்கும். புயலை பொருத்தவரை எந்த இடத்தில் கரையை கடக்கிறதோ அந்த இடத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.நவம்பர் 16-ஆம் தேதி உள்மாவட்டங்களுக்கு வந்து பின்னர் 17-ஆம் தேதி அரபிக் கடலில் கலக்க உள்ளது.
கரையை கடக்கும்
கடலோர மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு 15, 16 ஆகிய இரு நாட்களும், உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளுக்கு 16-ஆம் தேதியும் மழையை கொடுக்கும். எனது கணிப்பின் படி புதுவை, கடலூர் அதாவது சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.
மழை பெய்யும்
நாகை அருகே கரையை கடந்தால் சென்னைக்கு காற்று கிடையாது, ஒரு நாள் மழை பெய்யும். இதே கடலூர், புதுவையில் கடந்தால் காற்றுடன் மழையும் பெய்யும் என்று தெரிவித்தார்.