ஆஹா.. எல்லாம் நேற்று இரவோடு முடிஞ்சி போச்சு.. காலையும் தொடரும் என எதிர்பார்த்து ஏமாற்றம்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று காலையும் தொடரும் என எதிர்பார்த்ததில் ஏமாற்றமே விஞ்சியது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
கடந்த 2 தினங்களாக வடதமிழகம், சென்னை, கடலோர மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என அறிவித்ததால் இன்று 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவோடு போச்சு
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் சென்னை,காஞ்சி, திருவள்ளூர் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. அந்த மழை இன்று காலையும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவுடன் நின்று விட்டது.
5 ஏரிகள்
எனினும் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்த ஏரிகளில் எவ்வளவு நீர் வரத்து வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கெனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் 50 சதவீதம் நீர் நிரம்பிவிட்டது.
மழை பெய்ய வாய்ப்பு
இன்று மழை இல்லை. வானம் தெளிவாக காணப்படும். வெயில் எட்டிபார்க்கும். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் எங்கேயாவது ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்.
மேட்டுப்பாளையத்தில் கனமழை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சூப்பர் மழை பெய்துள்ளது. இதனால் 180 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூர், காவிரி டெல்டா பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். எனினும் இன்று அச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இன்று மழையில்லாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் எப்படியோ விடுமுறையை வாங்கிவிட்டீர்கள் என பிரதீப் ஜான் கிண்டலாக கூறியுள்ளார்.