இந்த சிகப்பு தக்காளி மட்டும் லேசா சென்னை பக்கம் நகர்ந்திருந்தால்.. நடப்பதே வேறு.. வெதர்மேன்
சென்னை: இந்த சிகப்பு தக்காளி மட்டும் சென்னை பக்கம் நகர்ந்திருந்தால் இன்று நடப்பதே வேறு என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில் அந்த சிகப்பு தக்காளி நகரும் நகரும் என ரேடார் பக்கத்தை ரெபிரஷ் செய்து செய்து எனது கைகளுக்கு வலியை ஏற்படுத்திவிட்டது.
அது மட்டும் சற்று சென்னை அருகே நகர்ந்திருந்தால் சிறிய கால இடைவெளியில் சும்மா மழை பிச்சு உதறியிருக்கும் என எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை
மழை பெய்யும்
நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக நல்ல மழை பெய்யும். சென்னையில் தொடங்கி நெல்லை வரை இப்படித்தான் இருந்திருக்கும். இன்று காலை கூட நல்ல மழையுடன் நமக்கு பொழுது விடிந்திருக்கும். இன்றும் மழை பெய்யும். ஆனால் அதிக எதிர்ப்பார்ப்பு வேண்டாம்.
கமென்ட்
ஆனால் கிரிக்கெட் மேட்சுக்கு ஒன்றும் நடக்காது. அது திட்டமிட்டப்படி நடக்கும். மேட்ச் பத்தி போட்டா உடனே நம்ம மழை விரும்பிகளுக்கு கோபம் வருகிறது. அப்படி கோபம் வந்தால் யாரெல்லாம் மேட்சுக்கு மகிழ்ச்சினு கமென்ட் போடுறாங்களோ அவங்கள வச்சு செய்ங்க. என்ன விட்டுடுங்க என கிண்டலாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பரவலாக மழை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குளிர்ச்சி
அது போல் சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர்ச்சியான சூழல் நிலவியது.