செல்லப் பிராணிகள் கொரோனாவை பரப்பாது.. பாவம் கைவிடாதீர்.. இது மிக கொடூரம்.. வெதர்மேன்
சென்னை: கொரோனா வைரஸை செல்லப்பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவை பரப்பும் என்ற பீதியில் பலர் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது. அது பொய்யான தகவல் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற தவறான தகவலை பரப்பியதால் சிக்கன் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. முட்டை விலையும் சரிவை சந்தித்துவிட்டன.
ஆட்டிப் படைக்கும் கொரோனா பதட்டம்.. ஊருக்கு பறந்த பேச்சுலர்கள்... சென்னை மேன்ஷன்களின் நிலை என்ன..?
போஸ்டர்கள்
தற்போது மற்றொரு வதந்தியும் பரப்பப்படுகிறது. அதாவது நாய், பூனை, பறவைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மூலம் கொரோனா பரவும் என்பதுதான் அது. இதனால் பீதியடைந்த மக்கள் செல்லப்பிராணிகளை பராமரிக்காமல் எங்காவது கொண்டு போய் விடும் நிலை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக போஸ்டர்களும் வெளியாகின்றன.
நீண்ட தூரம்
அதில் கொரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கையாக விலங்குகள், செல்லப்பிராணிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செல்லப்பிராணிகளை வளர்ப்போர் நாடு முழுவதிலும் தாங்கள் வளர்க்கும் நாய், பூனைகளை எங்காவது காட்டுப் பகுதியிலோ அல்லது நீண்ட தூரத்திலோ கொண்டு சென்று விடும் நிலை ஏற்படுகிறது.
செய்தி
அதிலும் சிலர் குட்டி செல்லப்பிராணிகளை விட்டு விடுவதால் அவை சாலைகளில் உள்ள வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது. இதுகுறித்து தகவலறிந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கொரோனா வைரஸ் செல்லப்பிராணிகள், வீட்டு, காட்டு விலங்குகள் மூலம் பரவாது என தெரிவித்தனர். இந்த நிலையில் செல்லப் பிராணிகளை கைவிடும் உரிமையாளர்கள் என ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தியை சுட்டிக் காட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
சுகாதார நிறுவனம்
இதுகுறித்து அவர் கூறுகையில் நாய்களோ, செல்லப்பிராணிகளோ கொரோனா வைரஸை மக்களுக்கு பரப்பாது. எனவே அவற்றை கைவிடாதீர்கள். அவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவர் போல், அவற்றுக்கு அன்பை செலுத்த மட்டுமே தெரியும். எனவே செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற கொடுமையை செய்யாதீர்கள், இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் விளக்கத்தை கேட்டு பெறுவேன் என தெரிவித்துள்ளார்.