பெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்
சென்னை: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக சென்னையில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இது முழுக்க முழுக்க மேலடுக்கு சுழற்சியால் ஏற்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவிக்கையில் வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
மிக கனமழை பெய்யும்
இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் அடுத்த 2 , 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். செப். 23 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரம் வெயில்
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து இன்று காலையும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சிறிது நேரம் வெயில் இருந்தது.
இடி இடித்தது
பின்னர் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பயங்கர சப்தத்துடன் இடி இடிக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதிக சப்தம்
அவர் கூறுகையில் சென்னையின் மேற்கு பகுதியில் செம்ம செம்ம மழை பெய்யும். பயங்கர காற்றுவீசும். புழுதி புயல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மிக அதிக சப்தத்துடன் இடி தாக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.