நம்ம ஊரா இது! மதியம் கூட வெயில் இருந்ததே! சென்னையில் சட்டென வானிலை மாறியது ஏன்? வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் இங்கொன்றும் அங்கொன்றுமாக மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு ஆந்திரா பகுதியிலிருந்து பலத்த காற்றானது தமிழக எல்லையை தாண்டுகிறது. அந்த காற்று வலுவிழந்துவிட்டது. எனினும் வலுவிழந்த காற்றானது சென்னை நகரம் அருகே உள்ளது.
இதனால் பலத்த காற்றுடன் சென்னை சில இடங்களில் மழை பெய்யக் கூடும். ஓசூரில் அதிக காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார். காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் மாலை 4. 30 மணிக்கு முகப்பேர், அம்பத்தூர், அண்ணாநகர், மாங்காடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் பயங்கர காற்று வீசி வருகிறது. அது போல் மாங்காடு பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நேற்றுடன் அக்னி முடிந்தாலும் சென்னையில் காலையில் இருந்து வெயில் சற்று அதிகமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது இந்த காற்றும், மழையும் சென்னை மக்களுக்கு இதமான சூழலை அளித்துள்ளது.
அதே “சக்கரம்”.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை மையம்! உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஃபேன் ரெகுலேட்டரில் 5 வரை இருக்க வேண்டும் என சட்டம் வைத்தது யார் என சண்டை போடும் அளவுக்கு ஃபேனை கூட்டி வைக்க முடியாத ஏக்கம் பலருக்கு உள்ளது. இதனிடையே அக்னி நட்சத்திரம் வேறு! பாடாய்படுத்திவிட்டது. இது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் இருந்தது.
இதுகுறித்து காலையில் வெதர்மேன் போட்ட ட்வீட்டில் கடல் காற்று முன் கூட்டியே வீசத் தொடங்கிவிட்டதால் சென்னை கடலோர பகுதிகளில் வெயில் குறையும். ஆயினும் மீனம்பாக்கம், அண்ணா நகர் மேற்கு, போரூர், முகப்பேர், வளசரவாக்கம், மணப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும். வேலூர்- சென்னை பெல்ட்தான் நேற்று தமிழகத்திலேயே அதிக வெப்பமான பகுதியாகும். அதே நிலை இன்றும் தொடரும் என தெரிவித்திருந்தார்.
அது போல் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மே 30- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும். மே 31- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.