மேட்டுப்பாளையத்தில் மேக வெடிப்பு.. 17 பேர் பலியாக காரணத்தை உதாரணங்களுடன் விளக்கிய வெதர்மேன்
சென்னை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதால் குறைந்த நேரத்தில் பேய் மழை பெய்தது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் நடூர் பகுதியில் கண்ணப்பன் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார்.
இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை மையம்
மேட்டுப்பாளையம்
இந்த விபத்துக்கு காரணமாக மேட்டுப்பாளையத்தில் நேற்று ஒரே நாள் இரவில் கொட்டித் தீர்த்த மழை என கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால் பெய்த பேய் மழையே சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் இறந்ததற்கு காரணம். அதாவது மேக வெடிப்பால் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்தது.
மகாராஷ்டிரா
இது போல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பியான் புயல் வந்த போது கெட்டி- குன்னூர் பள்ளத்தாக்கில் அதீத மழை பெய்தது. இதனால் தெற்கு கேரளாவிலிருந்து மகாராஷ்டிரா கடற்கரை பகுதிக்கு சென்றது. இதனால் கெட்டியில் ஒரே நாளில் 820 மி.மீ மழை பெய்தது.
அரிதான மழை
இந்த குன்னூர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மிக அரிதான மழையையே பெறும். கிழக்கு பகுதியில் பள்ளத்தாக்கு திறந்திருக்கும் போது தென்மேற்கு பருவமழை ,அதாவது மேற்கு திசை காற்று உள்ளே வராது. ஆனால் வடகிழக்கு பருவமழையின் போது கிழக்கு திசை காற்று வலுவிழந்து விடும். இதனால் அரிதான மழையே பெய்யும்.
மழை பெய்தால் விடாது
லட்சத்தீவிலிருந்து வடக்கு கேரளாவை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தால் கிழக்கு திசை காற்று வலுவடையும், அது தென்கிழக்கு திசையில் இருக்கும். இதனால் அந்த காற்று குன்னூர்- மேட்டுப்பாளையம்- காரமடை நோக்கி வரும். இதனால் அதிக மழை பெய்யும். இதனால் காற்றில் ஈரப்பதம் முழுவதும் மழையாக வரும் வரை இப்பகுதிகளில் மழை பெய்தால் விடாது.
தென்மேற்கு பருவமழை
இதுதான் இன்று அதிகாலை மேட்டுப்பாளையத்தில் நெல்லித்துறையில் நடந்துள்ளது. மேக வெடிப்பு ஏற்பட்டு 283 மி.மீ. மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு இதேநிலைதான் இருந்தது. ஒரே நாளில் 288 மி.மீ. மழைபெய்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழையின் போது அவலாஞ்சியிலும் 911 மி.மீ மழை பெய்தது.
குன்னூர்
தென்மேற்கு பருவமழையின் போது அவலாஞ்சியின் மீது கவனம் செலுத்த வேண்டும். அது போல் வடகிழக்கு பருவமழையின் போது தெற்கே மாஞ்சோலையும் குன்னூரும் கவனிக்கப்பட வேண்டும். நாளை குன்னூர்- மேட்டுப்பாளையம் பகுதிகள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.