இன்னும் 3 நாள்தான்.. கொரோனாவை தடுக்க தமிழகம் வருகிறது தடுப்பூசி.. விஜயபாஸ்கர் அதிரடி தகவல்
சென்னை: பிசிஜி தடுப்பூசியை, முதியவர்களுக்கு வழங்கி, தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் அரசு இறங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் என்ன கூறினார் என்று பாருங்கள்: உலக அளவில் நடைபெறும் அனைத்து வகையான ஆராய்ச்சிகளிலும், தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான வசதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா நோயாளிகளிடம், ரெட்மிசிவிர் என்ற மருந்து பரிசோதனை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் ரெட்மிசிவிர் மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆதாரம் இருக்கா.. இப்படி பேசாதீர்கள்.. மனசு வலிக்கிறது.. விஜயபாஸ்கர் உருக்கமான பேட்டி
பிசிஜி தடுப்பூசி
இந்த நிலையில்தான், ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள்படி, பிசிஜி தடுப்பூசி செலுத்தி முதியோர் மற்றும் பிற உடல்நல பாதிப்புள்ள மக்களை காப்பாற்ற கூடிய முயற்சியில் ஆரம்பித்துள்ளோம். அந்த ஆய்வுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த ஆராய்ச்சியை தமிழகத்தில் துவங்க உள்ளோம். ஆய்வுகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுப்பதற்குக் காரணம் நாம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான்.
மருத்துவமனை படுக்கை காலி
சென்னையில் 4 மருத்துவமனைகள், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, ஆகியவற்றுடன் சேர்த்து 5 மருத்துவமனைகள் மற்றும் 5 மையங்களில் நோடல் அதிகாரிகளை நியமித்து, காத்திருப்பு இல்லாத அளவுக்கு மருத்துவமனையில் அட்மிஷன் போட்டுவருகிறோம். ஒரு வாரத்தில் 30 மருத்துவமனைகளை இணைக்க உள்ளோம். இதற்காக ஒரு போர்ட்டலை உருவாக்குகிறோம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் எவ்வளவு படுக்கை காலியாக இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை, ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு மருத்துவமனையும் செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பொதுமக்கள் கூட இதை பார்த்துக் கொள்ளலாம். எந்த மருத்துவமனையில் இடம் காலியாக இருக்கிறதோ, அந்த மருத்துவமனைக்கு செல்ல முடியும்.
கட்டணம்
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 58 இலட்சம் அட்டைகள் உள்ளன. அந்த காப்பீடு அட்டை மூலமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெறுவதற்கான வழி வகைகளை முதல்வர் செய்துள்ளார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத 23 சதவீத மக்களுக்குதான் தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளோம். ஐசிஎம்ஆர் உத்தரவுப்படி, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை கட்டணம் 4500, நாங்கள் அதை ரூ.3000 என்ற அளவுக்கு குறைத்துள்ளோம். இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
காச நோய் தடுப்பு
பிசிஜி தடுப்பூசி என்பது, காச நோய் என்று அழைக்கக்கூடிய டிபிக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது முதியோர் மற்றும், கிட்னி, இதயம், அதிக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு, போடப்பட்டு, கொரோனா வராமல் தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் நம்புகிறது. இதை தமிழகம் முன்னெடுக்க உள்ளது.