ஒன்றல்ல, இரண்டல்ல.. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு 3,000 கோடி கூடுதலாக கிடைக்கப்போகிறது
சென்னை: மத்திய அரசிடமிருந்து அடுத்த நிதியாண்டில் தமிழகத்திற்கு, வரி வருவாயாக, கூடுதலாக ரூ.3000 கோடி கூடுதலாக நிதி கிடைக்க உள்ளது.
14வது நிதி கமிஷன் தகவல்படி, மத்திய அரசின் வரி வசூலில் இருந்து தமிழகம் தனது பங்காக 4.023 சதவீதத்தை பெற உள்ளது. இதன் மூலம், தமிழகத்திற்கு 2019-20ம் நிதியாண்டில் ரூ.33,978 கோடி நிதி கிடைக்க உள்ளது. நடப்பு 2018-19ம் நிதியாண்டில் தமிழகம் தனது வரி பங்காக ரூ.30,638.80 கோடியை பெற உள்ளது.
எனவே, கூடுதலாக சுமார் ரூ.3000 கோடி தமிழகத்திற்கு கிடைக்கப்போகிறது.
கார்பொரேட் வரி மற்றும் மத்திய ஜிஎஸ்டி மூலமாகத்தான் முதல் இரு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. இதையடுத்து, வருமான வரி மற்றும் மத்திய கலால் வரி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கார்பொரேட் வரி மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழகம் ரூ.9713 கோடியை பெற உள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ.11,003 கோடியாக உயர உள்ளது. ஜிஎஸ்டி மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழகம் ரூ.8494 கோடியையும், அடுத்த ஆண்டு ரூ.10,283 கோடியையும் பெற உள்ளது.