வந்தாச்சு அடுத்த ரவுண்டு.. 2 நாட்களுக்கு ஜில் ஜில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: வழக்கத்தைவிட வடகிழக்குப் பருவமழை இந்த சீசனில் அதிகமாக பெய்துள்ளது. இந்த நிலையில், இன்று முதல் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விடைபெற்றுக் கொண்டது. ஆனால் இப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நல்ல மழை பொழிவை பெற்று வந்த தென் மாவட்டங்களில்தான் இந்த முறையும் மழை பெய்யப் போகிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
அதிக மழை
கடந்த 19 நாட்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக, வழக்கத்தை விடவும் 937 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தூத்துக்குடி நகரின் சில பகுதிகளில் முட்டிக்கு மேலே, தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன. இந்த நிலையில்தான் இலங்கையின் கிழக்குப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
இதன் காரணமாக இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரம் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்த அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் மழை பெய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது தென் மாவட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் மற்ற தரப்பினர் மழையை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.