பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த முதல் தமிழக பெண் சினேகா.. என்ன சாதித்தார்?
சென்னை: பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் 7 பெண்களில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் ஒருவர். இவர் செய்துள்ள சாதனை என்ன? என்பதை பார்ப்போம்.
மகளிர் தினத்தையொட்டி தனது சமூகவலைதள பக்கங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என 5 நாட்களுக்கு முன்னர் பெரிய சர்ப்பிரைஸுடன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் பெண்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை நிர்வகிப்பார்கள் என பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ட்வீட்
அதன்படி இன்று காலை மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியது போல் சமூகவலைதளங்களிலிருந்து விலகுவதாகவும் தனது ட்விட்டர் கணக்கை 7 சாதனை பெண்கள் ட்வீட் செய்வார்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் முதல் பெண்ணாக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் மோடியின் கணக்கில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.
உணவளித்து வரும் பெண்
சென்னை பெண்ணான அவர் செய்த சாதனை உணவில்லாதோருக்கு உணவு அளித்து வரும் அமைப்பை நிர்வகித்து வருகிறார். ஆதரவற்றோர், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு 3 வேளையும் உணவளித்து வருகிறார். இதற்காக இவர் FoodBank India என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் சாலையோரம் உணவில்லாத மக்களுக்கு உணவளித்து வருகிறார்.
தாயிடம் இருந்து
இவரது அமைப்பின் நோக்கமே Fight for Hunger Free Nation. அதாவது பட்டினியே இல்லாத இந்தியாவை உருவாக்க போராடுவது ஆகும். ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் போன்று சூடு தாங்கும் பைகளுடன் சுடச் சுட உணவு வழங்கப்படுகிறது. வீடில்லாதோருக்கு உணவு அளிக்கும் பழக்கத்தை தன் தாயிடம் இருந்து கற்றுக் கொண்டதாக கூறுகிறார் சினேகா.
|
தாய்ப்பால்
இந்தியாவில் பட்டினியை போக்க வேண்டும் என்பதற்காக பாடுபடுவதாக கூறும் சினேகா, எங்கள் அமைப்புடன் கைகோர்க்க பெண்கள் முன்வர வேண்டும் என அழைத்துள்ளார். அனைவரும் ஒருவருக்காவது உணவளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் பட்டினியில்லாத நாடு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். பெரிய அளவில் சமைப்பது, குக்கிங் மாரத்தான்களையும் நடத்தி வரும் சினேகாவின் அமைப்பு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தி வருகிறார். இவரை பெரும்பாலோர் பாராட்டினர்.