இஷ்டத்திற்கு எழுத இது பழைய காங்கிரஸ் அல்ல... குஷ்புவிற்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர் காங்கிரஸ்
சென்னை: காங்கிரஸ் புதிய தலைவர் தொடர்பாக குஷ்பு தெரிவித்துள்ள கருத்திற்கு அக்கட்சியின் தமிழக இளைஞர் காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராகுலுக்கு பதில் சச்சின் பைலட் அல்லது ஜோதிராதித்யா சிந்தியாவை காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்திருக்கலாம் என சஞ்சய் ஷா என்பவர் தெரிவித்த கருத்தை வரவேற்று குஷ்பு ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா, இஷ்டத்திற்கு மனதில் இருப்பதை எழுத இது பழைய காங்கிரஸ் அல்ல என குஷ்புவை சாடியுள்ளார்.
பிஎம் கேர் நிதிக்கு சீன பணம்'.. பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய 8 கேள்விகள்!
மனதில் தோன்றியதை
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ள குஷ்பு மனதில் தோன்றிய கருத்துக்களை ஒளிவுமறைவின்றி எப்போதும் பேசக்கூடியவர். இதற்கு உதாரணங்களாக, திருமணத்திற்கு முன் உறவு, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு, திமுகவில் இருந்தபோது அக்கட்சியின் புதிய தலைமை பற்றி பேசியது, என பல நிகழ்வுகளை பட்டியலிடலாம். இப்போது காங்கிரஸில் இருக்கும் இவர் அக்கட்சியின் தேசியத் தலைவராக யார் வந்திருக்கலாம் என்பது பற்றிய தனது பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
குஷ்பு வரவேற்பு
ராகுல்காந்திக்கு பதில் காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் அல்லது ஜோதிராதித்யா சிந்தியாவை நியமித்திருக்கலாம், ராகுல் தலைவர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்ட நிலையில் இவர்கள் இருவரது பெயர்களை தான் எதிர்பார்க்கப்பட்டன என்கிற வகையில் காங்கிரஸ் முன்னாள் செய்திதொடர்பாளர் சஞ்சய் ஷா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனை வரவேற்கும் வகையில் குஷ்பு ட்வீட் பதிவிட்டதால் தமிழக இளைஞர் காங்கிரஸார் அவருக்கு எதிராக கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
இஷ்டத்திற்கு எழுத
ராகுல்காந்தி தலைவராக வரவேண்டும், அவர் தலைமையில் கட்சி இயங்கவேண்டும் என நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உழைத்துக்கொண்டுள்ள நிலையில் குஷ்புவின் பதிவை ஏற்க முடியாது என தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தெரிவித்துள்ளார். மேலும், மனதில் நினைக்கும் சொந்தக் கருத்துக்களை எல்லாம் கட்சியை மையப்படுத்தி இஷ்டத்திற்கு எழுதக்கூடாது என்றும் இது பழைய காங்கிரஸ் இல்லை எனவும் கூறியுள்ளார்.
பகல் கனவு
தமிழக இளைஞர் காங்கிரஸாரின் இந்த எதிர்ப்பை அடுத்து ட்வீட்டரில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தாம் ஒரு காங்கிரஸ்காரர் என்றும் ராகுல் மீதும் சோனியா மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜக பிரமுகர் ஒருவர், குஷ்புவை விரைவில் கமலாலயத்தில் எதிர்பார்க்கலாம் என ட்வீட் பதிவிட்ட நிலையில் அதற்கு பகல் கனவு என பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.