மாமல்லபுரம் வந்து வியந்தீர்களே.. கலாச்சார குழுவில் ஏன் தமிழருக்கு இடமில்லை? மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கலாசாரத்தை ஆராய்வதற்காக ஒரு குழுவை மத்திய அரசு சமீபத்தில் அமைத்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உட்பட தென் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடம் தரப்படவில்லை.
இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கண்டித்தார்.
நான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.. நம்ப மாட்டீர்களா.. நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை -எல்.முருகன்
வரவேற்பு, மகிழ்ச்சி
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 16 போ் கொண்ட நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்முயற்சிக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தென் இந்தியர்கள்
ஆனால், இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் குழுவில், மிகப் பழமையான திராவிடா் கலாச்சாரத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்த நிபுணா் குழுவில் இடம் பெறாதது துரதிருஷ்டவசமானதாகும். தற்போது கீழடியிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்துவரும் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த முடிவுகளின்படி பார்த்தால், சங்க காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தோன்றியது எனத் தெரியவருகிறது. இதன் மூலம், உலகின் மிகப் பழமையான, தற்போதும் உள்ள கலாச்சாரமாகவும் மொழியாகவும் தமிழைச் சொல்ல முடியும்.
மாமல்லபுரம் வந்தீர்களே
கடந்த ஆண்டு நீங்கள் மாமல்லபுரம் வந்து, தமிழக பாரம்பரியத்தை நேரில் கண்டு வியந்தீர்கள். இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழக கலாச்சாரம் மற்றும் மொழிக்கு இடமளிக்காமல் முழுமையடையாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என கருதுகிறேன். தற்போது, இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்கள் யாரும் இல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
நிபுணர் குழு
எனவே, இந்திய கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை மறுசீரமைப்பு செய்து, அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.